தேனமுதம் அலைவீசும் தெய்வீகப் பாற்கடலில்
வானமுதின் உடன்பிறப்பாய் வந்தாய்-
வானவரின் குலம்முழுதும் வாழவைக்கும் மாலவனின்
வண்ணமணி மார்பினிலே நின்றாய்
சீதமதி விழிபதித்து செல்வவளம் நீகொடுத்து
சோதியெனப் புதுவெளிச்சம் தருவாய்
வேதமுந்தன் வழியாக வெண்ணிலவு குடையாக
வளர்திருவே என்னகத்தே வருவாய்
மூன்றுபெரும் அன்னையரின் மூளுமெழில் கருணையிலே
மண்ணுலகம் இயங்குதம்மா இங்கே
தோன்றுமுங்கள் துணையிருந்தால் தோல்வியென்றும் வாராது
தொட்டதெல்லாம் துலங்கிடுமே நன்றே
கலைமகளும் வார்த்தைதர அலைமகள்நீ வாழ்க்கைதர
கவலையெலாம் நீங்கிடுமே நொடியில்
மலைமகளும் சக்திதர முயற்சியெலாம் வெற்றிதர
மணிவிளக்கை ஏற்றிவைப்பாய் மனதில
சேர்த்தநிதி பெருகுவதும் செம்மைபுகழ் வளருவதும்
செய்யவளே உன்கருணை தானே
கீர்த்தியுடனவாழுவதும் கருதியதை எய்துவதும்
கமலத்தாள் கருணையிலே தானே
கனகமழை பெய்வித்த காருண்ய மாமுகிலே
கண்ணார தரிசித்தேன் கண்டு
தனமுடனே கனம்நிரம்பி மனம்மகிழச் செய்திடுவாய்
தாங்கிடுக தளிர்க்கரங்கள் கொண்டு

Comments

  1. சேர்த்தநிதி பெருகுவதும் செம்மைபுகழ் வளருவதும்
    செய்யவளே உன்கருணை தானே
    தனமுடனே கனம்நிரம்பி மனம்மகிழச் செய்திடுவாய்தாங்கிடுக தளிர்க்கரங்கள் கொண்டு

    ஆஹா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *