காலைவரை காத்திருக்கத் தேவையில்லையே-அவள்
கண்ணசைத்தால் காலைமாலை ஏதுமில்லையே
நீலச்சுடர் தோன்றியபின் வானமில்லையே-அவள்
நினைத்தபின்னே தடுப்பவர்கள் யாருமில்லையே
சொந்தமென்னும் பகடைகளை உருட்டச் சொல்லுவாள்-அதில்
சோரம்போன காய்களையும் ஒதுக்கச் சொல்லுவாள்
பந்தமென்னும் கம்பளத்தைப் புரட்டச் சொல்லுவாள்-இனி
படுக்க உதவாதெனவே மடிக்கச் சொல்லுவாள்
உள்ளபசி என்னவென்றும் உணர்ந்துகொள்ளுவாள்-அவள்
உரியநேரம் வரும்பொழுதே உணவு நல்குவாள்
அள்ளியள்ளி உண்ணக்கண்டு சிரித்துக்கொள்ளுவாள்-நாம்
அழ அழவும் பந்தியினை முடித்துக் கொள்ளுவாள்
சூத்திரங்கள் வகுத்தபின்தான் ஆடவிடுகிறாள்-அவள்
சுருதியெல்லாம் சேர்த்துத் தந்து பாடவிடுகிறாள்
சாத்திரங்கள் நடுவில்தன்னைத் தேட விடுகிறாள்-மனம்
சாயும்போது சந்நிதியை சேரவிடுகிறாள்
சொன்னதெல்லாம் காற்றில்போகும்; மௌனம் சத்தியம்-இந்த
சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டால் முக்தி நிச்சயம்.
என்னையெல்லாம் நிமிர்த்திவைத்த லீலை அற்புதம்-இன்னும்
என்னவெல்லாம் செய்திடுமோ சக்தி தத்துவம்
கூட்டுக்குள்ளே உயிருக்கவள் காவல் நிற்கிறாள்-அந்தக்
கூனல்பிறைக் காரனுடன் காதல் செய்கிறாள்
வீட்டுக்குள்ளே ஏற்றும் சுடரில் வாழ வருகிறாள்-நம்மை
வீனையென்று மடியில்தாங்கி வீடு தருகிறாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *