ஒருசொல் சொன்னது வானம்- அதன்
ஒவ்வோர் எழுத்திலும் ஒவ்வொரு விடுகதை
ஒருசொல் இசைத்தது கானம்- அதன்
ஒவ்வொரு ஸ்வரத்திலும் ஒவ்வொரு பழங்கதை
ஒருசொல் உரைத்தது ஞானம்-அதன்
ஒவ்வோர் இடுக்கிலும் மௌனத்தின் வினாவிடை
ஒருசொல் உரைத்தது காலம்-அதன்
ஒவ்வோர் அதிர்விலும் ஒவ்வொரு சிறுகதை
 ஒருசொல் எறிந்தது வானம்-அதில்
ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு சேதி
ஒருசொல் அடைந்தது வேதம்-அதில்
ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு நீதி
ஒரு சொல் சொன்னது காலம்-அதில்
ஒவ்வோர் ஆணிலும் பெண்ணொரு பாதி
ஒருசொல் வளர்த்தது யாகம்-அதில்
ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு ஜோதி
ஒருகல் எறிந்தது யாரோ-அதில்
ஒவ்வொரு குளத்திலும் ஒவ்வொரு வட்டம்
ஒருவில் வளைத்தது யாரோ-அதில்
ஒவ்வொரு கணையிலும் ஒவ்வொரு திட்டம்
ஒருசொல் விதித்தது யாரோ-அதன்
ஒவ்வொரு பொருளிலும் யுகங்களின் சட்டம்
ஒரு நெல் விதைத்தது யாரோ -புவி
உண்டால் அம்ம-அது விளைந்திடும் மட்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *