கிழக்குப் பார்த்த வீட்டில் நுழைந்தால்

கீற்று வெளிச்சம் முதலில் தெரியும்.

அரக்குப் பட்டின் அதீத வாசனை;

அதன்மேல் பிச்சி செண்பக நறுமணம்;

கனக்கும் வெளிச்சம் கனலும் சுடர்கள்;

‘கலகல’ வென்று வெண்கலச் சிரிப்பு;

ஒளிக்கும் ஒளிதரும் ஒய்யாரக் கருமை;

ஒவ்வோர் உயிரையும் உலுக்கும் தாய்மை;

துளித் துளியாக துலங்கும் அழகு;

தொடர்ந்தும் தொட்டிட முடியாக் கனவு;

பளிங்குக் கண்களில் படரும் குறும்பு;

பக்கத் தொலிக்கும் பண்தமிழ்,பழமறை;

மேலைத் திசையில் மணிவிழி பதித்து

வாலையைப் பார்ப்பான் அமுத கடேசன்;

கோலத் திருவிழி கிழக்கே பதிய

நாதனைக் காண்பாள் நம் அபிராமி;

நுதல்விழி கொண்ட நூதன இணைகள்

முதல்விழி மூடி மோனத்திருக்க

இதம்தரும் நான்கு இணைவிழி கலந்து

விதம்விதமான சரசத்தில் லயிக்க

நிரந்தரமான நிலைபேறழகி

அருள்தரும் கடவூர் அணுகுக மனமே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *