சூல்கொண்டு நீலம் சுடரும் முகிலதுவும்

பால்கொண்ட பிச்சி பெருமுலையோ-மால்கொண்ட

நெஞ்சின் கனமோ நகருகிற வானமோ

நஞ்சுண்ட கண்டம்தா னோ

சாவா திருக்க சுடுங்கவலை யாலிங்கு

மூவா  திருக்க மருந்துண்டு-ஏவாத

அம்பால் புரமெரித்து ஆனை உரிபோர்த்த

நம்பன் தருகின்ற நீறு

பூதங்கள் ஐந்தின் பொறியகற்றும் போர்க்களத்தே

நாதன்தாள் தானே நமதரணாம்-சீதங்கொள்

வேலையெழும் நஞ்சை விருந்தாகக் கொண்டவனின்

சூலமே நீயே சுடு.

நீறோடு நீறாய் நெடுமேனி ஆகும்முன்

ஆறோடே ஆறாய் அழியும்முன் -ஏறேறும்

நாதன் கழலே நினையாயென் நெஞ்சமே

ஏதும் குறையில்லை யே


தந்தோன் அவனே தருதல் மறுப்பானோ
செந்தமிழ் வல்லநம் சொக்கேசன் -சிந்தையில்
சொல்லாய் பொருளாய் சுடர்விடும் கற்பனையாய்
எல்லாமாய் உள்ள அவன்

எல்லையொன் றில்லாத ஏகன் அநேகனவன்
வில்லை வளைக்கையில் ஏன்சிரித்தான் இல்லையென
சொல்வார் வினைகளையும் சேர்த்தே எரிக்கின்ற
நல்லான் நகைபூத்தான் நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *