இந்தச் சிறுமியை துணைக்கழைத்தால்-வினை

ஏதும் செய்திட முடிவதில்லை
சொந்தப் புத்தியும் இயங்கவில்லை-இவள்
செய்கைகள் எதுவும் விளங்கவில்லை
வந்தாள் ஒருநாள் தானாக -என்னை
வாட்டி வதைக்கிற தேனாக
அந்த நாள்முதல் நானுமில்லை-அட
அதன்பின் எனதென ஏதுமில்லை
 
ஒப்பிட  முடியாக் குறும்பியென-மெல்ல
உள்ளே தள்ளிக் கதவடைத்தேன்
அப்பொழுதும் அவள் அயரவில்லை-தனியே
ஆடிக் களிக்கும் குரல் கேட்டேன் 
எப்படி சாத்தியம் என்றறிய -நான்
எட்டிப் பார்த்தேன் மனமழிந்தேன்
சொப்புச் சாமான் வரிசையிலே -அவள்
சுற்றும் கோள்களை வைத்திருந்தாள்
 
 
நட்சத்திரங்களை சோழியென்றாள்-அவள்
நாளையும் நேற்றும் தோழியென்றாள்
உச்சிப் பொழுதினில் நள்ளிரவில்-அவள்
ஊரினைச் சுற்றி ஓடுகிறாள்
பச்சை நிறமா புதுசிகப்பா-அவள்
பேரெழில் நிறமும் புரியவில்லை
பிச்சியைப் போல்சில பொழுதுகளில்-இந்தப்
பேரெழில் கண்மணி ஆட்டுவிப்பாள்
 
ஏற்றிய தீபம் போலிருப்பாள்-அவள்
எரிமலை போலவும் சீறிடுவாள்
காற்றினில் தென்றல் இவளென்பேன் -ஒரு
கணத்தினில் புயலென்று காட்டிடுவாள்
ஈற்றோ முதலோ இல்லாமல் -அந்த
ஈசனின் இதயத்தில் வாழ்பவள் முன்
தோற்றே ஜெயித்தேன் நானவளை-அவள்
தோல்விகள் வெற்றிகள் தாண்டி நிற்பாள்
 
 
ஆயுள் பிச்சை அவள்கொடுப்பாள் -பல
ஆயிரம் இச்சைகள் வளர்த்திடுவாள்
தாயென்றும் சேயென்றும் உருமாறி-பல
தகிடு தத்தங்கள் செய்திடுவாள்
கோயில்கள் தோறும் சிலையாவாள் -அந்தக்
கோலங்கள் கடந்த நிலையாவாள்
மாயைக்கும் மாயை ஆனவளை- பாழ்
மனதினில் வைத்தே ஒளியடைந்தேன்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *