சிவத்தின் பெருங்கருணையே ஒரு பொய்கையாய் பெருகி நிற்கிறது.அதுவும் வண்டுகள் மொய்க்கும் பொய்கை. அதாவது பொய்கையை வண்டுகள் மொய்க்கக் காரணம் அதில் பூத்திருக்கும் தாமரைகள். சிவப்பொய்கையில் குதிக்கும் இந்த மனித வண்டுகள் அவனுடைய திருவ்டித் தாமரைகளைத் தேடி கைகளால் குடைகின்றன.

வழிவழியாய் சிவனை வழிபடும் தவம் செய்த இவ்வுயிர்கள் ,தழல்போல் சிவந்து திருநீறு பூசிய சிவனை, சிற்றிடையும்
தடங்கண்களும் கொண்ட உமையம்மையின் மணவாளனை உருகிப் பாடி உபாசிக்கிறார்கள்.

இறையருளுக்குப் பாத்திரமானவர்கள் வாழ்க்கை அற்புதங்களும் அதிசயங்களும் நிரம்பிய வாழ்க்கை.அவற்றுக்கு நீங்கள் காரணங்கள் காண இயலாது. ஆனால் அந்த அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்டே ‘ஈசனால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இவர்கள்’ என்பதை அனைவரும் உணர முடியும்.

அப்படி என்னென்ன உயர்உகள் ஒரு மனிதனுக்கு சாத்தியமோ அனைத்தையும் அடைந்து அந்த சிறப்புகளின் வியப்பையும் கடந்து விட்டோம் என்னும் விதமாக
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்

என்று பாடுகின்றனர்.

அப்படி ஆட்கொள்ளப்பட்டவர்கள் பிற நாட்டங்களால் சபலங்களால் தளராத வண்ணம் காப்பதுவும் இறைவன் செயலேயாகும் என்று இப்பாடலில் விண்ணப்பிக்கின்றனர்.

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போற்
செய்யா வெண்ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *