மாணிக்கவாசகர் சொல்லும் இறையனுபவத்தின் அடையாளங்களில் ஒன்று,”மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்தல்”.மார்கழியில் குளிர்ந்த நீர்நிலையில் இறங்கினாலே மெய் நடுங்குகிறது.சிவசக்தியின் கருணையாகிய பொய்கையில் இறங்கினால் !!
இன்றளவும் இறையனுபவத்திற்கு ஆட்படுபவர்கள் உடலில் அத்தகைய விதிர்விதிர்ப்புகளை நாம் காணலாம்.

இறையனுபவத்தில் ஊறித் திளைக்கும் பரவசப் பெருக்கத்தில், சிவனருளுக்கு இவ்வுயிரை அருகதை உடையதாய் ஆக்கும் பொருட்டு அதன் மலங்களை நீக்கி தகவுடைய உயிராக்கிய அம்பிகையின் திருவடிகளையும் அப்பனின் திருவடிகளையும் வணங்கி இப்பெண்கள் மகிழ்கின்றனர்.

ஒருபாத்திரம் சேற்றில் விழுந்தால் பெண்கள் பணியாளர்களை விட்டு எடுக்கச் சொல்வார்கள். ஆனால் அவர்களுடைய குழந்தை தான் செய்த அசுத்தத்திலேயே புரண்டு கொண்டிருந்தால் தானே அள்ளியெடுத்து தூய்மை செய்து துடைத்து, முத்த்மிட்டு மகிழ்வார்கள்,

மனித உயிர், தன் குற்றங்களை, குற்றங்கள் என உணராமல் அதிலேயே உழலும் போது,அந்த உயிரை அக்குற்றங்களிலிருந்து அகற்றி,தன் வளைக்கரங்களால் வாழ்விப்பவள் பராசக்தி என்பதால்,
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி
என்கிறார்.
சீதப்புனலாடி சிற்றம்பலம் பாடி சிவப்பரம்பொருளின் பல்வேறு பெருமைகளைப் பாடி இன்புறும் போது,” இத்தகுதி எனக்கு வந்தது எவ்வாறு” எனும் கேள்வி எழ, அதற்கு அம்பிகை நம்மைத் தகுதி செய்ததே காரணம் என்னும் நன்றியுணர்வும் புரிதலும் மலர்வதை பாடலின் இறுதியில் உணரமுடிகிறது
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள் ஆமா பாடி
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *