சிறகுலர்த்தும் ஒருபறவை அலகு – அதன்
சிற்றலகின் நெல்லில் அதன் உலகு
திறந்திருக்கும் வான்வழியே பயணம்- பின்
தருவொன்றில் தன்கூட்டில் சயனம்
மறப்பதில்லை தன்னுடைய பாதை-அது
மொழிபேசத் தெரியாத மேதை
அறிவுக்கும் அறியாத யுக்தி-அதை
அறிந்தாலோ அதன்பெயரே சக்தி

பாறைக்கு நடுவினிலே முளைக்கும்- அந்த
பறவைதின்ற கனியிருந்த விதையும்
சூறைக்கு நடுவினிலும் துளிர்க்கும்-அது
செடியாகி மெல்லமெல்ல நிமிரும்
வேறொருநாள் வருமந்தப் பறவை-புது
விருட்சத்தின் கிளைதேடி அமரும்
மாறுமிந்த காட்சிகளின் யுக்தி-அதன்
மூலம்தான் அன்னைபரா சக்தி

அண்டத்தில் சிறுதுகளின் அசைவும்- அவள்
ஆணையினைப் பெற்றதனால் நிகழும்
விண்டதொரு பாறையின்நீர்க் கசிவும்-அந்த
வித்தகியாள் விழிபட்டு வழியும்
பிண்டத்துள் நின்றவுயிர் ஒளியும்- அவள்
பேரருளால் ஒருநாள்போய் ஒளியும்
கொண்டிடுக அவள்பதத்தில் பக்தி- மழை
கொண்டலென அருள்பொழிவாள் சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *