குளிரக் குளிர குங்குமம் கொட்டி
மலர மலர மாலைகள் கட்டி
ஒளிர ஒளிர தீபம் ஏற்றினோம்-

தளரத் தளர பொங்கலும் வைத்து
தழையத் தழையப் பட்டையும் கட்டி
தகிட தகிட தாளம் தட்டினோம்

குழையக்குழைய சந்தனம் இட்டு
கனியக் கனிய கனிகளும் வைத்து
உருக உருக கைகள் கூப்பினோம்

வருக வருக வாலை நீயே
தருக தருக ஞானம் தாயே
சுடர சுடர சூடம் ஏற்றினோம்

கருகும் கருகும் வினைகள் எல்லாம்
பெருகும் பெருகும் நலன்கள் எல்லாம்
பரிந்து பரிந்து பாதம் போற்றினோம்

மலரும் மலரும் உனது கண்கள்
நிலவும் நிலவும் உனது வதனம்
கனவின் கனவில் கண்டு பாடினோம்

நனையும் நனையும் விழிகளோடு
நினையும் நினையும் மனதினோடு
தேவ தேவி உன்னைத் தேடினோம்

இருளில் இருளில் ஒன்பதுநாள்
அருளில் அருளில் நனைய வந்தே
அன்னை அன்னை உன்னை நாடினோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *