சந்தனக் காப்பினில் குங்கும வார்ப்பென
சக்தி திகழுகின்றாள் – எங்கள்
சக்தி திகழுகின்றாள்
வந்தனை செய்பவர் வாழ்வினில் பைரவி
வெற்றி அருளுகின்றாள் – புது
வெற்றி அருளுகின்றாள்

அன்புக் கனலினைக் கண்ணில் சுமந்தவள்
ஆற்றல் பெருக்குகின்றாள் – எங்கள்
ஆற்றல் பெருக்குகின்றாள்
துன்பச் சுவடுகள் தீர்த்து முடிப்பவள்
தொட்டு மலர்த்துகிறாள் – உயிர்
தொட்டு மலர்த்துகிறாள்

பல்வகைப் பூக்களின் புன்னகைக் கோலத்தில்
பைரவி மின்னுகிறாள் – லிங்க
பைரவி மின்னுகிறாள்
வெல்லும் வழிவகை சொல்லும் மவுனத்தில்
வித்தகம் காட்டுகின்றாள் – அன்னை
வித்தகம் காட்டுகின்றாள்

தூரத்தில் நின்றாலும் பாரத்தைப் போக்கியே
துர்க்கை துணை வருவாள் – எங்கள்
துர்க்கை துணை வருவாள்
ஆரத்தி நேரத்தில் ஆடிவரும் அன்னை
பொன்னடி போற்றிடுவோம் – நம்
அல்லல் அகற்றிடுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *