நவராத்திரி கவிதைகள் – 2(30-9-2019)

இடைவெளியே இல்லா இவள் கருணை கிட்ட

தடை – வெளியே இல்லை தனக்குள் – மடையை

அடைக்கும் அகந்தை அடித்தே உடைத்தால்

கிடைக்குமே சக்தி கனிவு .

சிறகசைத்துப் பாடுகிற சின்னப் பறவை

உறவென்று வானத்தை உன்னும் _ பிறவியினைப்

பெற்றவர்க் கெல்லாம் பராசக்தி தாய்தானே

உற்றிந்த உண்மை உணர்.

உன்னில் ஒரு துளியாய் உள்ளாள் அவளைநாம்

உன்னும் பொழுதே உருத்தெரிவாள் – இன்னும்

தொடரும் பிறவித் துயர்நீங்க தேவி

சுடரடிகள் நீசென்று சூழ்.

மாயத் திரைகள் மறைக்கும் மஹாமாயை

தாயென் றழைத்தால் திரை விலகும் – ஓயுமே

எண்ணில் பிறவிகள் எல்லாமே சக்தியை

எண்ணில் நிகழும் இது.

தானே வெயிலாகித் தானே நிழலாகி

தானே இயங்குந் தயாபரி _ தேனாய்

சிவக்கூட்டில் நின்றொழுகும் சுந்தரி பாதம்

தவக்காட்சி கண்டு தெளி

மும்மலப் பிள்ளையை மோகிக்கும் தாய்மையே

அம்மையே எங்கள் அபிராமி – இம்மையே

எம்மையே ஆளும் எழிலரசி செம்மையாய்

நம்மையே காப்பாள் நயந்து .
_ மரபின்மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *