DG வைஷ்ணவா கல்லூரி என்றால் சென்னையில் மிகவும் பிரசித்தம். அதன் முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்தேன்.
தீக்ஷாரம்பம் என்ற பெயரில் நடந்த இந்த விழாவுக்கு முதல் நாள் இரவே கல்லூரி வளாகத்தில் சென்று தங்க நேர்ந்தது.
பொதுவாக விழா நடக்கும் வளாகத்தை விட வெளியில் தங்குவதை நான் பெரிதும் விரும்புவேன்.
ஆனாலும் இந்த முறை அந்த அழைப்பை நான் தவிர்க்க விரும்பவில்லை.
ஏனென்றால் கல்லூரியின் முதல்வர் கேப்டன் டாக்டர் சந்தோஷ் பாபு என் கல்லூரி கால நண்பர். பூசா கோ கலை அறிவியல் கல்லூரியில் நான் சோசியாலஜி படித்த போது கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார்.
இந்தக் கல்லூரியில் நீண்ட காலமாக பணிபுரிந்து பின்னர் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக விளங்கி மறுபடியும் இதே கல்லூரியில் முதல்வர் பொறுப்பை ஏற்று இருக்கிறார்.
. ஏறக்குறைய 12 ஆயிரம் மாணவர்கள் 650 ஆசிரியர்கள் என்று ஒரு கல்விக் கடல் போல் விரிந்திருக்கும் அந்த கல்லூரி வளாகம் ஆன்மீக சூழலில் உருவாகியுள்ளது.
விழா இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது கல்லூரிக்குள் நுழைந்து கொஞ்ச தூரத்தில் அமைந்திருக்கும் அழகான ஆலயங்களை கண்ணுற்றேன்.
விநாயகர் வித்யாலக்ஷ்மி சரஸ்வதி ஆஞ்சநேயர் கருடாழ்வார் உடனான கிருஷ்ணர் என்று அழகிய வழிபாட்டு மையங்கள்.
கல்வி நிலையம் கோயில் போல் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு நடையைத் தொடர்ந்தால் எதிரில் தீர்த்த குளம் தெரிந்தது . திடுக்கிட்டுப் போனேன்
அப்புறம்தான் தெரிந்தது அது மழை நீர் சேகரிப்பு ஏற்பாடு என்று..
அதிகாலை வேளையிலேயே நிகழ்ச்சிக்கு தயாராக திறந்த வெளி அரங்கம் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் பிரிவு வாரியாக அமர வேண்டிய வரிசைகள் ஒதுக்கப்பட்டிருந்தன
.
மற்ற கல்லூரி விழாக்களில் விழா தொடங்கும் நேரத்தில் மாணவர்கள் நிரம்பிய அரங்குகளுக்குள்ளேயே சென்று பழகிய எனக்கு தயார் நிலையில் இருந்த அரங்கை பார்ப்பது ஒரு புதிய அனுபவமாக இருந்தது
கல்லூரியின் செயலாளர் திரு அசோக் முந்த்ரா தலைமையில் விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் சந்தோஷ்பாபு என்னை அறிமுகம் செய்கிற சாக்கில் கல்லூரி காலத்தில் நான் படிப்பதை தவிர எல்லா வேலையும் செய்வேன் என்பதை மறைமுகமாக போட்டு உடைத்தார்.
நானும் பதிலுக்கு “அவர் படிக்கிற காலத்தில் ஒழுங்காக படித்ததால் கல்லூரியில் இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வந்திருக்கிறார். நான் ஒழுங்காக படிக்காததால் இப்போது ஒவ்வொரு கல்லூரியாக போய்க்கொண்டிருக்கிறேன்”என்றதும் அவையில் சிரிப்பலை.
பெற்றோர்கள் மாணவர்கள் என்று பலரும் அந்த திறந்தவெளி அரங்கில் கடல் போல் திரண்டு இருந்தார்கள்
அந்த மாணவர் கடலின் கலங்கரை விளக்கமாக என் கல்லூரி நண்பர் இருப்பது குறித்து மிகவும் மகிழ்ந்தேன்.
இது போல் ஒன்று இரண்டு அனுபவங்கள் எனக்கு முன்னர் ஏற்பட்டிருக்கின்றன..
பள்ளிப் பருவத்தில் பாலர் வகுப்பில் எனக்கு வகுப்பு தோழராக இருந்த அசோக் என்னும் திரு அசோக் பக்தவத்சலம் இன்று கே ஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர். அவர் தலைமையில் கல்லூரி விழாவில் பேசியதுண்டு.
வைஷ்ணவா கல்லூரி முதல்வர் டாக்டர் சந்தோஷ் பாபு கடலூர் பகுதியை சேர்ந்தவர். சோசியாலஜியில் என் சக மாணவர்களோடு ஒரே அறையில் தங்கி இருந்தவர் என்ற முறையில் எனக்கு அப்போதே பழக்கம்.
படிப்பில் வெகு சூட்டிகை. அவருடைய அறை தோழர்கள் அதற்கு நேர் எதிர். என்ன இருந்தாலும் என் வகுப்பு தோழர்கள் அல்லவா…
அவர்களுக்கு கல்லூரிக்கு போவது அவ்வளவாக பிடிக்காது. அதுமட்டுமல்ல.. சந்தோஷ் பாபு மட்டும் சரியாக கல்லூரிக்குப் போவது அவர்களுக்கு அவ்வளவும் பிடிக்காது.
அவரைப் போக விடாமல் தடுப்பதற்காக அவர் குளித்துவிட்டு வருவதற்குள் அவருடைய ஆடைகளை எடுத்து ஒளித்து வைத்து விடும் நல்ல மனதுக்கு சொந்தக்காரர்கள் அந்த நண்பர்கள்.
இத்தனை போராட்டத்துக்கு மத்தியிலும் கல்லூரி படிப்பை முடித்து வெற்றிகரமான கல்வியாளராக விளங்குகிறார் டாக்டர் சந்தோஷ் பாபு.
உயர்கல்வித்துறையில் அவர் இன்னும் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பது என் போன்ற அவருடைய நண்பர்களின் விருப்பம். அன்று அவரைக் கல்லூரிக்குப் போக விடாமல் தடுத்த நண்பர்களின் விருப்பமும் அதுவே…
“இது சாதனை செய்க பராசக்தி!”