ஒருவருக்கு அறிவிக்கப்பட்ட விருதை அந்த தளத்தில் நின்றே விவாதிக்க வேண்டும். தனிப்பட்ட அபிப்பிராய பேதங்கள், கருத்தியல் மோதல்கள், முரண்பாடுகள், தனிப்பட்ட முறையில் பேசப்படும் புகார்கள் ஆகியவை இங்கு விவாதப் பொருள் அல்ல. நவீன இலக்கியம், பின் நவீனத்துவ இலக்கியம் ஆகியவை தமிழ் இலக்கியப் பரப்பின் ஒரு தரப்பு மட்டுமே. அவை மட்டும் தான் இலக்கியங்களா என்றால் இல்லை.தமிழின் மரபிலக்கியம் முழு வல்லமையுடன் இன்றும் உருவாகி வருகிறது. மரபு வடிவத்தில் மட்டுமின்றி புதுக்கவிதையில் கூட மரபார்ந்த கருதுகோள்களுடன் வெளிப்படைத் தன்மை, நேர்மறை எண்ணங்கள் அழகியல் அம்சங்கள் கொண்ட படைப்புகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
அவற்றிலும் தனித்தன்மை கொண்ட படைப்பாளர்களை காலம் அடையாளம் கண்டு கொண்டாடவே செய்கிறது.
ஒருவர் எழுதும் எழுத்துகளை வாசகர்கள் மதிப்பதற்கு சில காத்திரமான காரணங்கள் உண்டு. ஒரு வாசகர் கொண்டிருக்கும் ரசனை நீங்கள் முன்னிறுத்த விரும்பும் ரசனை தளத்திலிருந்து மாறுபட்டு இருப்பதாலேயே அந்த வாசகர்களை தரம் குறைந்த வாசகர்கள் என அழைப்பது மிக மிகத் தவறு. அது வெறும் ஆணவம் மட்டுமே,
இந்த கணக்கில் ஒரு வாசகர் இன்னும் திறந்த மனதுடன் இருக்கிறார். தன்னுடைய பணத்தையும் நேரத்தையும் செலவழித்து நூல்களை தேர்ந்தெடுத்து வாசிக்கிறார். பிடித்திருந்தால் அந்த எழுத்தாளரை தொடர்கிறார் தனிப்பட்ட முறையில் அந்த எழுத்தாளருக்கும் அந்த வாசகருக்கும் நடுவே சில பார்வைகளில் தீவிர முரண்பாடு இருக்கலாம். உதாரணமாக இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நான் சிந்தனைப் போக்கில் வலதுசாரி தரப்பைச் சேர்ந்தவன். அது ஒரு வாசகனாக என் நிலைப்பாட்டை பாதிப்பதில்லை.
கவிஞர் சிற்பி அவர்கள் சமீபத்தில் ஒரு செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டதாக கேள்விப்பட்டேன்.ஞானபீடம் விருது தேர்வுக் குழுவில் அறிஞர் தெ.பொ.மீ. அவர்கள் இடம்பெற்றிருந்தாராம். அந்த ஆண்டு பாவேந்தர் அவர்களுக்கு ஞானபீடம் விருது தருவதாக பரிசீலனை எழுந்ததாம். தெ.பொ.மீ அவர்கள் கருத்தியல் ரீதியாக பாவேந்தருடன் முரண்பட்டிருந்தாலும் அந்த விருது பாவேந்தருக்கு தரப்பட்டாக வேண்டும் என்பதற்கான காரணங்களை அந்த கூட்டத்தில் அடுக்கினாராம். ஆனால் பாவேந்தர் சில நாட்களிலேயே மறைந்து விட்ட காரணத்தால் தேர்வு நிலையில் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த கேரள கவிஞர் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டன.
அறிஞர் தெ.பொ.மீ. அவர்களின் இந்த அணுகுமுறை தான் தமிழ்த்தன்மைக்கே உரிய சான்றாண்மை.
கவிஞர் வைரமுத்து அவர்களைப் பற்றி இதுவரை நான் எழுதிய நூல்கள் 3.
1. என் மேல் விழுந்த மழைத்துளிகள்
2. ஒரு தோப்புக்குயிலாக
3. ஒளியை செதுக்கும் உளி
இவை நீங்கலாக “வைரமுத்தியம்” சர்வதேசக் கருத்தரங்கில் நான் வாசித்த கட்டுரையின் சில பகுதிகள் இந்த இடத்திற்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்துதமிழ்ப் பாண்டிய நாடு.”
காண்கிறோம்.
சங்க காலம் காவிய காலம் ஆகியவற்றைக் கடந்து சற்றேறக்குறைய 15 ஆம் நூற்றாண்டில் இருந்து
வண்ணப் பாடல்கள் அதிகம் செல்வாக்கு பெற்றன. தொல்காப்பியர் வண்ணம் குறித்து சுட்டியிருந்தாலும் அந்தப் பாவகை செல்வாக்கு பெற்ற காலம் 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே ஆகும்.
வண்ணப் பாடல்கள் வெற்றி பெறும் விதத்தை சுட்ட வந்த அறிஞர் ச.வே. சுப்ரமணியம்
” ஓரெழுத்தின் பயிற்சி மிகுதி, ஒரு குறிப்பிட்ட ஓசையின் பெருக்கம், ஒரு சொல்/ எண்/ சீர்/ தொடை ஒரு பொருண்மையின் முடிவு/ முடியாமை ஆகிய அம்சங்களை வண்ணப் பாடல்களின் அங்கங்களாக குறிப்பிடுகிறார்.
கவிஞர் வைரமுத்துவின் தனி கவிதைகளில் முதலில் இடம் பெற்று பின்னர் திரைப்பாடல் வடிவம் கொண்ட கவிதைகள் பல.
அவற்றில் ஒன்று
” மனிதா மனிதா இனியுன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வடியும் உதிரம் முழுதும் இனியுன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும் நிலவின் முதுகை உரசும்”
இந்த கவிதை முழுவதும் விரவி வரும் ஒலிநயம் நினைந்து இன்புறுத்தக்க ஒன்று.
இந்தப் பாடல் கவிதையாக உருவாகி பா வகையாக வடிவம் பெற்றதை
நினைத்துப் பார்க்கையில் இதில் இரு வேறு இலக்கண வரையறைகள் ஒரே இடத்தில் பொருந்தி போகிற புதுமையும் நிகழ்ந்திருக்கிறது.
பாவகை செய்யுள் வகை ஆகியவற்றுக்கான வேறுபாடு என்ன?
” பாவிற்கும் செய்யுளுக்கும் உரிய வேறுபாட்டினை இளம்பூரணர் வேறுபடுத்தி காட்டுகிறார். செய்யுள்களுள் ஒரு பொருளைப் புலப்படுத்தி இசையொழுங்கோடு முற்றிலும் ஒன்றிய நிலையில் அமைவது பாட்டு என்றும் ஓசை ஒழுங்கு மாறுபடாத இயற்றப்படுவது செய்யுள் என்றும் அவர் குறிப்பிட்டு இருப்பது அவ்விரண்டுக்குமான நுட்பமான வேறுபாட்டினை உணர்த்துகிறது” என்கிறார் பேராசிரியர் இராம குருநாதன்.
இங்கு ஒரே கவிதை செய்யுள் வடிவமும் எடுத்து பா வடிவமும் எடுக்கிற சிறப்பைக் கண்டு வியக்கிறோம். படைப்புச் செழுமை பிறக்கும் பொழுதே சிறகு முளைத்து பிறக்கும் போது இத்தகைய அழகுகள் சாத்தியம்.




