திரு சீமானுக்கு திரு.ஜெயமோகன் எழுதிய கடிதத்தில் தனக்கு அவர் தரப்பில் இருந்துவரும் வசை மொழிகளை தடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருக்கிறார். 
அதில் “இலக்கியம் என்றால் விவாதம் வரும் பூசல் வரும் “என்று குறிப்பிட்டு இருக்கிறார். 
ஆனால் அவரும் சரி மற்றவர்கள் பலரும் சரி இந்த விவாதத்தை இலக்கியப்பூர்வமாக கொண்டு செலுத்தவில்லை. 
கவிஞர் வைரமுத்து படைப்பாளரே இல்லை என்பது போன்ற சித்திரத்தை நிறுவ முயலும் போதே விமர்சனம் விவாதம் என்பதெல்லாம் வெறும் அவதூறுகளாகத் திரிந்து விட்டன.

கவிஞர் வைரமுத்து பற்றிய என்னுடைய புத்தகம் குறித்து திரு ஜெயமோகன் எழுதிய கட்டுரை இணையத்தில் பரவலாக கிடைக்கின்றது. 


“முழுக்கமுழுக்க நேர்நிலை நோக்கு கொண்ட கவிஞர் அவர். துயரங்கள் இல்லாதவர். கவிதை பொதுவாக மானுடனின் தவிர்க்கமுடியாத கையறுநிலைகளை நோக்கிச் செல்வது. அங்கே செயலற்று நின்று ஏங்குவது. அந்த அம்சம் வைரமுத்துவிடம் இல்லை. சாதாரணமாக கவிஞர்களில் இருக்கும் தனிமை ஏக்கம், இறந்தகால ஏக்கம் போன்றவையும் இல்லை. நவீன கவிதைகளில் உள்ள இருண்மையும் கைவிடப்பட்ட நிலையும் முற்றிலும் இல்லை. வைரமுத்துவின் கவிதைகள் வெயில் பரந்த தெற்கத்தி நிலம் போல பளீரென்று நான்கு பக்கமும் திறந்து கிடக்கின்றன.”

இவை கவிஞர் வைரமுத்து கவிதைகள் பற்றி திரு ஜெயமோகன் எழுதியது.

நவீன கவிதையின் போக்குக்கும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை பாணிக்கும் இருக்கிற வித்தியாசத்தை இவரே இவ்வளவு தெளிவாக சொல்லியிருக்கிறார்.

ஃபிரண்ட்லைன் பேட்டியில் கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பல நேரங்களில் inappropriate என்று எழுதுவதும் இலக்கிய விவாதம் என்கிற அளவுகோலுக்குள் வரவே வராத அவதூறு.
 
ஏனென்றால் கவிஞர் வைரமுத்துவின் திரைப்பாடல்கள் பற்றி அந்தக் கட்டுரையில் திரு.ஜெயமோகன் இப்படி எழுதுகிறார்…

“வைரமுத்துவின் சிறப்பாக நான் காண்பதை இங்கே முத்தையாவும் சுட்டிக்காட்டுகிறார். அவர் தமிழ் மரபின் சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர். பாடல் [லிரிக்] என்பது எடுத்தாள்கை கவிதை [அப்ளைட் பொயட்ரி] ஒரு மரபின் சாரமான கவித்துவத்தை முழுக்க வேர்பரப்பி உறிஞ்சி தன் கவித்துவத்துடன் இணைத்து ஒன்றாக்கி இசைக்குள் பொருத்தும் கலை அது. தமிழின் பிற பாடலாசிரியர்கள் செவ்வியல் மரபில் இருந்து பெற்றுக்கொண்டதே அதிகம். நாட்டார் மரபில் இருந்தும் புதுக்கவிதை மரபில் இருந்தும் தமிழ்ச் செவ்வியல் மரபில் இருந்தும் ஒரேசமயம் பெற்றுக் கொண்ட பாடலாசிரியர் என்பதே வைரமுத்துவின் தனித்தன்மை.”

தமிழ் கவிதையில் மரபுக் கவிதையை ஆழமாக பயின்று புதுக்கவிதையை தனித்தன்மை கொண்ட வீச்சுகளுடன் வெளிப்படுத்தி திரு ஜெயமோகனே சொல்வது போல நவீன கவிதையின் இருண்மை இல்லாமல் உருவாகும் படைப்புகள் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள். 

சமீபத்தில் ஆனந்த விகடன் நேர்காணலில் கவிஞர் வைரமுத்து சொல்லியுள்ள ஒரு கருத்து இங்கு முக்கியமானது. 

“எதார்த்தத்தை அப்படியே எழுதுவது ஒரு வகை. கலைத்தன்மையோடு வெளிப்படுத்துவது இன்னொரு வகை” என்று சொல்லி இருக்கிறார்.

இரண்டு பாணிகளுமே படைப்பிலக்கியத்திலும் திரைப்பாட்டிலும் கொண்டாடப்படுபவை.
 நான் அடிக்கடி சொல்லும் உதாரணம் ஒன்று.

 
ஒரு படத்தில் கதாநாயகி கண்ணீர் வடிக்கிறாள் என்றால் கவியரசர் கண்ணதாசன் ” ஏன் அழுதாய் ஏன் அழுதாய்! என்னுயிரே ஏன் அழுதாய்! நான் அழுது ஓய்ந்ததற்கு நன்றி சொல்லவோ அழுதாய்”என எழுதும்போது கேட்பவருடைய உள்ளங்கள் உருகி விடுகின்றன. 

 வேறொரு படத்தில் அதே சூழலுக்கு கவிஞர் வைரமுத்து எழுதும்போது “கண்ணில் என்ன கார்காலம்? கன்னங்களில் நீர்க்கோலம்” என எழுதுவது கலைத்தன்மை கொண்டது. 

அவரைப் பிடிக்காதவர்கள் இதை அலங்கார அடுக்கு என்று சொல்லிவிட்டுப் போகலாம்.
ஒருவர் எவ்வளவு பெரிய படைப்பாளியாகவும் இருக்கலாம். அல்லது திறனாய்வு அறிஞராக இருக்கலாம். ஒரு படைப்பை வாசிக்கும் நேரத்தில் நான் ஒரு வாசகம் என்ற உணர்வுடன் வாசித்தால் திறந்த மனதுடன் அந்தப் படைப்பை பார்க்க முடியும்.

 கவிஞர் வைரமுத்து எழுத்துகள் இவர்கள் முன்னிறுத்தும் வகைமையிலிருந்து வேறானது.இலக்கியச் செழுமை இலக்கணத் துல்லியம் ஆகியவற்றை உணர்ந்த உள்வாங்கிய எழுத்து நடை. இன்றளவும் இந்த வடிவம் தான் இலக்கியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது. இளைஞர்களை மொழியின்பால் ஈர்ப்பது.

இவர்கள் முன்னிறுத்தும் வகையில் இருந்து வேறானது என்பதாலேயே அது இலக்கியம் அல்ல என்று ஆகிவிடாது.

இருபதாம் நூற்றாண்டிலும் 21ம் நூற்றாண்டிலும் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ஒரு வாசகன் என்ற முறையில் “காவிய மரபின் குறுநீட்சி” என்று வகைப்படுத்துகிறேன். 

இந்தச் சூழலில் அவர் படைப்பாளியே அல்லர் என்பது போன்ற அவதூறு யார் செய்தாலும் அது உண்மையின்நோக்கத்தில் இல்லாமல் உள்நோக்கத்தின் அடிப்படையில் வீசப்படும் வசை தான் என்பது உறுதி. 

இந்த அவதூறுக்கு இலக்கிய விவாதம் இலக்கியப் பூசல் என்றெல்லாம் நாகரீகச் சாயம் பூச முயலாதீர்கள்.

வல்லமை மிக்க தமிழ் மரபின் பின்புலத்தில் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் துலங்கும் தன்மை பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *