நவராத்திரி கவிதைகள் 6(3/10/2019)

புத்தகம் என்பது கோயிலென்றே -அதை[

புரட்டிடும் நொடியினில் நினைந்திடுக

புத்தம் புதிய கலைகளெல்லாம் -அந்த

பாரதி கொடைஎன மகிழ்ந்திடுக

தத்துவ முட்டல்கள் வாதங்கள்- நிகழ்

தர்க்கங்கள் தீர்ப்புகள் எல்லாமே

சத்திய நாயகி வாணியவள்- பதச்

சலங்கையின் ஒலியென அறிந்திடுக

அவள்தான் எழுவகை ஸ்வரமமைத்தாள்-இங்கு

அபிநயம் ஆயிரம் வடித்தளித்தாள்

கவிதைகள் காவியம் மலரவைத்தாள்-கருங்

கல்லுக்குள் சிற்பங்கள் ஒளித்துவைத்தாள்

இவரும் அவரும் விருதுபெற -கலை

இயற்றிடும் ஆற்றலும் அவள்கொடுத்தாள்

தவங்கள் செய்ததன் பயனாக -கலை

தேர்ந்திடும் வல்லமை அவள்கொடுத்தாள்

பிள்ளைகள் விரல்களை நாம்பிடித்தே-நல்ல

பசுநெல் பரப்பினில் எழுதுகையில்

கிள்ளைக் குரலினில் அக்‌ஷரமாய்-சிறு

கண்களில் தெரிபவள் கலைமகளே

கொள்ளும் செயல்கள் அனைத்திலுமே- அவள்

கூட வருவாள் எண்ணெழுத்தாய்

விள்ள முடியாப் புதுமையினள் -எங்கள்

வாணியின் திருவடி சரண்புகுவோம்

நுண்கலை வாணர்கள் திரண்டிடுக-பல

நூதனக் கவிஞர்கள் இசைத்திடுக

பண்கலையாளர்கள் பாடிடுக-நடம்

புரிகிற வித்தகர் ஆடிடுக

வண்ணக் கலைமகள் கொண்டாட்டம்-இங்கு

விதந்து கலைகளைப் பேணுதலே

மண்மிசை வானகம் தென்படுக-எங்கள்

மகத்துவக் கலைமகள் அருள் தருக

-மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *