நவராத்திரி கவிதைகள் 9(6/10/19)

வெண்ணிறப் பாற்கடல் மத்தியிலே

வெண்ணிலவாக எழுந்தவளாம்

தண்ணந் துழாயணி கேசவனின்

திருமார் பினிலே அமர்ந்தவளாம்

எண்ணிய யாவையும் நிகழ்ந்திடவே

என்றும் இன்னருள் பொழிபவளாம்

வண்ணத் திருமகள் திருவடிநம்

வாசலில் வைத்தால் வாழ்ந்திடுவோம்

பாம்பணை துயில்கிற பேரழகி

பிள்ளைகள் பசியைப் போக்கிடுவாள்

தேம்பும் மனங்களை தேற்றிவைத்து

தேடரும் செல்வங்கள் ஆக்கிடுவாள்

தாம்புக் கயிற்றினில் கட்டுண்ட

தாமோதரனின் மனையரசி

ஆம்நம் அன்பினில் சிறைப்படுவாள்

ஆயிரம் நன்மைகள் அளித்திடுவாள்

செக்கச் சிவந்த தாமரையே

சிம்மா சானமாம் அவளுக்கு

தக்க தருணத்தில் தனம்தான்யம்

தருவது வழக்கம் அவளுக்கு

பக்கம் இருந்து பாலூட்டி

புகழ்வரும் விதமாய் ஆளாக்கி

எக்கணமும் எமை ஆண்டிடுக

இலட்சுமி தேவியே காத்திடுக

-மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *