ஒருநூறு கதைபேசும் கண்கள்-உன்

ஒளியிதழில் உருவாகும் பண்கள்

கருவாகும் முன்பேநான் கண்டேன்-உனைக்

காணத்தான் பலபிறவி கொண்டேன்

செங்கமலம் போல்நான்கு கரங்கள்-அவை

சிந்துகிற எல்லாமே வரங்கள்

தங்கமுகம் பார்த்தாலே போதும்-எனத்

தவமிருக்கும் ஒருநான்கு வேதம்

கடவூரின் கோவிலிலே நின்றாய்-அமுத

கடேசனுள்ளம் கண்வீச்சில் வென்றாய்

உடலூரில் உயிர்தீபம் தந்தாய்-அதன்

ஒளிபெருக என்னுள்ளே வந்தாய்

தபவாணர் தேடுகிற பதங்கள் -என்

துயர்தீர்த்து செய்கின்ற இதங்கள்

அபிராமி நீயெனது பக்கம்-இனி

அண்டாது ஒருபோதும் துக்கம்

கண்சிமிட்டி நீபார்க்கும் பார்வை-அதன்

கனமௌனம் இசைகூட்டும் கோர்வை
விண்முழுதும் நீதெரியும் அழகு-நீ
வீசிவிட்ட தாடங்கமே நிலவு
வரம்கேட்ட மறுநொடியே கொடுப்பாய்-நீ
வழியெங்கும் துணையாக இருப்பாய்
 தரம்கெட்ட என்னைப்போய் வளர்ப்பாய்-கொஞ்சம்
தடுமாறும் படிசெய்து சிரிப்பாய்
தள்ளாடி விழப்போகும் மகவு-தரை
தொடும்முன்னே அணைப்பதுந்தன் கனிவு
உள்ளோடி நீயிருக்கும் பொழுது-உண்டோ
உலகத்தில் திறக்காத கதவு??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *