முகிலை முகிலே என அழைக்காமல்,மழையே என்றழைத்துப்
பேசுகிறார் மாணிக்கவாசகர். ஆண்டாளும் ஆழி மழைக்கண்ணா
என்று திருப்பாவையில் பாடுவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
முகில் கண்ணன் திருவுருவை ஒத்திருப்பதாக ஆண்டாள் பாடுவதும்,
முகில் அம்பிகை திருவுருவை ஒத்திருப்பதாக மாணிக்கவாசகர்
பாடுவதும் ஒரே உத்திதானா என்றால், இல்லையென்றே
தோன்றுகிறது.
ஏனெனில் இங்கே நிறத்தால் மட்டும் முகிலானது அம்பிகையை
ஒத்ததாக இல்லை.அது உருக்கொள்ளும் போதே அம்பிகையின்
அருட்செயலுடன் ஒப்புநோக்கத்தக்க செயலொன்றை செய்கிறது.
“முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து” முகிலானது கடல் நீரை
முகந்து மேலேறுவதை, தனக்குள் கடலை சுருக்கிக் கொண்டெழுவதாய்
மாணிக்கவாசகர் பாடுகிறார்.அம்பிகையும் அது போலத்தான்.கருணைக்
கடலாகிய சிவபெருமானின் அருட்திறத்தை உயிர்களுக்கெல்லாம்
பெற்றுத் தரும் அருளுள்ளம்,அம்பிகையின் திருவுள்ளம்.
அவளே உடையவள்.காரியத்தில் மட்டுமின்றி காட்சியிலும் உடையவள்
உருவெனப் பொலிந்து,அவளுடைய மின்னிடை போல் மின்னி,அவள்
திருவடிகளில் முழங்கும் சிலம்பென முழங்கி அவளுடைய திருப்புருவம்
போல் வானவில் விளைய சிவனடியார்களுக்கு அம்பிகை அருள்மழை
பெய்வது போல் மழையே நீ பொழிக எனவேண்டுகின்றனர்.
மழையும் வெய்யிலும்கைகோர்த்து வானவில் விளைவிப்பதுபோல் அம்பிகை
அடியவர்க்கு அருளும் அல்லாதாருக்கு சீற்றமும் ஒருங்கே காட்டுவதால் அவள்
திருப்புருவங்களுக்கு வானவில்லை உவமை சொல்வதில் கூடுதல் பொருத்தம்
ஒளிர்கிறது.
முன் இக்கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.