பாலனாம் மறையோன் பற்றப்
பயங்கெடுத் தருளு மாற்றால்
மாலுநான் முகனுங் காணா
வடிவுகொண் டெதிரே வந்து
காலனார் உயிர்செற் றார்க்குக்
கமழ்ந்தகுங் குலியத் தூபம்
சாலவே நிறைந்து விம்ம
இடும்பணி தலைநின் றுள்ளார்.

-சேக்கிழார்

திருக்கடவூர் வீதிகளெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. வாசல்களெங்கும் மாக்கோலங்கள் மின்னின. பூரண கும்ப உபசாரங்களுடன் நெற்றி நிறைய திருநீறு பூசிய கோலத்தில் ஊரெல்லையில் மக்கள் திரண்டிருந்தனர். ஆளுடைய பிள்ளையாம் மக்கள் திரண்டிருந்தனர். ஆளுடைய அடிகளாம் திருநாவுக்கரசரும் வழிபாட்டுக்காக திருக்கடவூர் எழுந்தருளப் போவதாய் செய்தி வந்ததிலிருந்தே எல்லோருக்கும் எல்லையிலா மகிழ்ச்சி.

கலயரை முன்னிலைப்படுத்திக் கூடியிருந்த கூட்டம் அருளாளர்கள் வரப்போகும் திசைநோக்கி ஆவலுடன் காத்திருந்தது. திருப்புகலூரிலிருந்து புறப்பட்டு தலங்கள் தோறும் வழிபட்டு வந்து கொண்டிருந்தனர் தேவாரத் தோன்றல்கள்.

பஞ்சாட்சர முழக்கம் மிக அருகே ஒலிக்க திருமேனி தனில் அசைவோடு ஆளுடைய அரசும் துள்ளல் நடையில் தோணிப்புரப் பிள்ளையும் வந்து கொண்டிருப்பது கண்டு ஆரவாரம் செய்தனர் ஊர்ப் பொதுமக்கள். திருநாவுக்கரசர் திருவடிகள் தோய நடந்து வருவதால் சம்பந்தப் பெருமானும் உடன் நடந்து வந்தார். அவரது முத்துச்சிவிகை தனியே அசைந்தசைந்து வந்த காட்சி அடியவர் கூட்டத்திற்கு நடுவே அன்னம் அசைவதுபோல் இருந்தது.

எதிர்வருவோரும் எதிர்க்கொண்டழைத்தோரும் ஒருவரையொருவர் பணிய, திருநீற்று நதிகள் சங்கமமாகி சிவக்கடல் நோக்கி நகர்வதுபோல் அனைவரும் திருக்கோவில் சென்று சேர்ந்தனர். அமுதப்பெருக்காய் அருள்பெருக்கும் அமுத கடேசரைக் கண்ணாரக் கண்ட களிப்பில் தமிழ்ப் பெருக்காய் தேவாரத் தேன்மழை பொழிந்தது.

பெருமானின் பல்வேறு பெற்றிமைகளைப் பட்டியலிட்டு, அவனல்லவா கடவூரில் வீற்றிருந்து அருள் செய்பவன் என்று பெருமிதம் பொங்கப் பதிகம் பாடியருளினார் ஆளுடைய பிள்ளையார். திருக்கடவூரில் நுழைந்த மாத்திரத்தில் அத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை உணர்ந்து, “விரிதரு தொல்புகழ் வீரட்டானம்” என்று சம்பந்தர் அருளிச்செய்ய கலயரின் கண்கள் நிறைந்தன.

திருக்கடவூரிலிருந்து வீசிய குளிர்ந்த காற்று திரைகடலில் இருந்து வருவதென்றே எல்லோரும் எண்ணியிருந்தனர். திரு ஞானசம்பந்தர் வேறொரு காரணம் சொன்னார்.

“இங்கிருக்கும் பெருமான், உயிர்களுக்கெல்லாம் தலைவன், நள்ளிருளில் நடமாடுபவன். அடியவர்களின் இதயமாகிய தாமரையில் பாதங்களை வைத்திருப்பவன். புலித் தோல் அணிந்து விடையேறி வருமந்த விமலன்பால் அடியவர்கள் கொண்டிருக்கும் அன்பின் குளிர்ச்சியே திருக் கடவூரைக் குளிர்விக்கின்றது.”

“நாதனும் நள்ளிரு ளாடினா னும்நளிர் போதின்கண்
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியுங்
காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே
வேதம் தோதியும் வீரட்டா னத்தர னல்லனே!”

கனல்வடிவாகிய கண்ணுதற் கடவுள் காலனை சங்கரித்தபோது பூபாரம் பெருக பூமாதேவி வந்து வழி பட்டாள். அட்ட வீரட்டானங்களில் பூமித் தத்துவம் பொருந்தப் பெற்றது திருக்கடவூர். இதனைக் குறிக்கும் விதமாக, “செங்கனல் வடிவாகிய சிவபெருமான், நில வடிவாகவும் நிற்கிறார். ஆகவனீயம், காருகபத்தியம், தட்சிணாக்கினி எனும் மூவகை நெருப்பாகவும் திகழ்கிறார். நான்கு வேதங்களும் அவரே. ஞானநூல்களை ஓதல், ஓதுவித்தல், கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் என்ற ஞான வேள்வி ஐந்து இயற்றும் முனிவர்களின் துணையாக நிற்பவரும் அவரே” என்று பாடினார் பிள்ளைப்பெருமான்.

“செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனுங்
கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள்
வெவ்வழ லேந்துகை வீரட்டா னத்தர னல்லனே!”

திருக்கடவூர் அமுதகடேசனை திருஞானசம்பந்தர் தமிழால் பாடுபவர்கள் பாவங்கள் நீங்கும் என்று பதிகப் பலனும் அருளினார் காழிப்பிள்ளையார்.

தன்னுடைய பதிகம் நிறைவு பெற்றதைக் குறிப்பால் உணர்த்துவதுபோல் திருநாவுக்கரசரை நோக்கி திருஞான சம்பந்தர் கைகுவிக்க அரசர் பதிகங்கள் அருளத் தொடங்கினார்.

திருநேரிசை அருளிய அப்பர் பெருந்தகை, ==புலர் காலைப் பொழுதில் நீராடி, இறைவன்பால் பெருங்காதல் கொண்டு முறைப்படி தூப தீபம் இடுபவர்களின் திருவுள்ளங்களில் இறைவன் கரும்புக் கட்டிபோல் இனிப்பான்++ என்னும் பொருள் பட,

“பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே!”

என்று பாட திருஞானசம்பந்தர் பொருள்பொதிந்த பார்வையை கலயர் மேல் பதித்துப் புன்னகை புரிந்தார். திருக்கடவூர் தேவதேவனை, திருநேரிசை, திருவிருத்தம், திருக்குறுந் தொகை ஆகிய மூவகைப் பதிகங்களால் பாடிப் பரவினார் வாகீசப் பெருந்தகை.

வாழ்வின் வினைகளால் தடுமாறி, வெய்ய சோதியில் விழுந்த விட்டிலாய்த் தவிக்கும் மனிதர்கள், தகிக்கும் துன்பத்தைத் தணிக்கும் திருப்பாடல்கள் அவை.

“தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவா றொன்று மின்றி
விலக்குவா ரிலாமை யால விளக்கதிற் கோழி போன்றேன்
மலக்குவார் மனத்தி னுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்கநான் கலங்கு கின்றேன் கடவூர்வீ ரட்ட னாரே!”

பெருமானை யானையாகவே உருவகித்து ஆளுடைய அரசர் பாடிய திருநேரிசைப் பதிகம் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. தல விநாயகராகிய கள்ளவாரணப் பிள்ளையாராகவும் இறைவனை உருவகித்தார் திரு நாவுக்கரசர்.

“வெள்ளி மால்வரை போல்வதொர் ஆனையார்
உள்ள வாறெனை யுள்புகும் ஆனையார்
கொள்ள மாகிய கோயிலுள் ஆனையார்
கள்ள ஆனைகண் டீர்கட வூரரே!”

சிவபெருமான், பாலுக்கழுத உபமன்யு முனிவருக்காக பாற்கடல் ஈந்ததையும், ஆலமரத்தின் கீழமர்ந்து அரும்பொருள் உபதேசம் செய்ததையும், மார்க்கண்டேயருக்காக காலனைக் காய்ந்ததையும் ஒப்பிட்டு, திருவிருத்தம் பாடினார்.

“பாலனுக் காயன்று பாற்கடல் ஈந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரணமோதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டுதொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்த பிரான்கடவூருறை உத்தமனே!”

வழிபாடு நிறைவுபெற்றதும் இருபெரும் குரவர்களும் குங்கிலியக் கலயர் இல்லத்திற்கு எழுந்தருளினர். சற்று முன்னதாகவே மனை திரும்பி சைவத்தின் கண்களாய்த் திகழ்ந்த இருவரையும் எதிர்கொண்டழைத்த கலயர், திருப்புகலூரில் இவர்கள் இருவருடன் முருக நாயனார், நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகியோர் ஓரிருநாட்கள் முன் தங்கியிருந்து உடனுறைவின் பயன் பெற்ற விதம் குறித்துப் பேரார்வத்துடன் கேட்டறிந்தார்.

அறுவகை உணவு பரிமாறி, அருளாளர்கள் அருளையும் சிவனருளையும் அள்ளிப் பருகினர் கலயர்தம் குடும்பத்தினர். இருவரும் விடைபெற அந்த அபூர்வ நிகழ்வின் நினைவுகளிலேயே நெடுங்காலம் லயித்திருந்து, அமுதகடேசப் பெருமானுக்கு குங்கிலியம் இட்டு குங்கிலியக் கலயர் என்னும் திருநாமத்துடன் நிறைவாழ்வு வாழ்ந்து சிவனடி சேர்ந்தார் கலயர்.

குங்கிலிய நறுமணத்தில் கலயரின் தொண்டுச் சிறப்பையும் சேர்த்துச் சுமந்து திசையெங்கும் சேர்த்தது கடவூர்ப் பதியின் கொண்டல் காற்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *