எட்டிப் பிடிக்க வானம் உண்டு
எத்தனை பேரிங்கு தாவுகிறார்?
கட்டி எழுப்பக் கோட்டைகள் உண்டு
கனவுடன் வாழ்பவர் ஆளுகிறார்
முட்டி முளைக்கும் தாவர முயற்சி
மனிதர்கள் பலருக்கும் இருப்பதில்லை
வெட்டிவிட்டாலும் வளரும் முனைப்பு
வந்தால் மனிதன் தோற்பதில்லை.

ஆகாயத்தில் மழையும் வெயிலும்
அதிலே யாருக்கு முரண்பாடு
போகும் வழியில் பகையும் நட்பும்
பூமியில் அதுதான் ஏற்பாடு
ஆகாதவர்கள் அவரிவர் என்பவர்
அடைந்து கிடப்பார் வீட்டோடு
தாகம் இருப்பவர் துணிந்து நடப்பார்
நினைத்ததை முடிப்பார் துணிவோடு

ஏமாற்றங்கள் எதிர்ப்படுமென்றே
ஏதும் செய்யா திருக்காதே
நாமாய் முயன்றால் நாளும் முயன்றால்
நல்லது நடக்கும். மறக்காதே
பூம்பூம் மாடாய் போகும் போக்கு
புண்ணாக்கைத்தான் பரிசளிக்கும்
ஆமைத் தயக்கம் ஆகாதப்பா
ஆளுமைக் குணமே பேரெடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *