குவளைத் தண்ணீர் குடித்துக் கிளம்பு
குறிக்கோள் நோக்கிச் செல்ல
கவலைக் கண்ணீர் துடைத்துக் கிளம்பு
கருதிய எல்லாம் வெல்ல
தவறுகள் தந்த தழும்புகள் எல்லாம்
தத்துவம் சொல்லும் மெல்ல
தவம்போல் உந்தன் தொழிலைத் தொடர்ந்தால்
தெய்வம் வருமெதிர் கொள்ள

பொன்னில் இழைத்த விலங்கென்றாலும்
பூட்டப் படுவது வலிதான்
தன்னைத் தொலைத்த பாதையில் மீண்டும்
தெளிந்து நடந்தால் சரிதான்
இன்னும் சரியாய் இருந்து பார்த்தால்
இந்த வாழ்க்கை சுகம்தான்
என்னவந்தாலும் மாறும் என்றே
யாரோ சொன்னது நிஜம்தான்.

வேருக்குக் கீழே வேலைகள் நடக்கும்
வெளியே தெரிவதும் இல்லை
யாருக்கும் ஒருநாள் எல்லாம் சிறக்கும்
இருளா வானத்தின் எல்லை?
போருக்குக் கிளம்பும் வீரனின் இதழ்களில்
புன்னகை ஆயுதம் பொருத்து
ஊருக்கும் ஒருநாள் உன்பலம் தெரியும்
உன்னை நீநிலை நிறுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *