எல்லாம் புதிதாய்த் தொடங்கவென
இன்னொரு வாய்ப்பைத் தேடுகிறோம்;
என்றோ செய்த தவறுகளை
இன்று திருத்த எண்ணுகிறோம்.

புதிதாய் முயற்சி தொடங்கிவிட
புத்தம் புது நாள் எதற்காக?
இதயத்தின் ஆழத்திலும் முழுவிருப்பம்
இருந்தால் போதும் நமக்காக!

முன்னை விடவும் தெளிவிருந்தால்
மன்னிக்கின்ற பரிவிருந்தால்
இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வரும்
என்றும் வாழ்வில் மகிழ்ச்சி வரும்.

மண்ணில் நிகழ்கிற விடியலெல்லாம்
மற்றொரு வாய்ப்பை வழங்கத்தான்!
எண்ணம் எதுவும் கைகூடும்
என்கிற உறுதியை மொழியத்தான்!

ஆளைக் கவிழ்க்கிற தோல்விகளும்
அடியுடன் வீழ்த்தப் போவதில்லை;
நாளை என்றொரு நாளுமுண்டு
நம்பிக்கை என்றும் சாவதில்லை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *