திருமகள் பெருங்கருணை

mahalakshmi

ஒரு தடவை…ஒரே தடவை
உன்விழி என்மேல் படவேண்டும்
வரும் தினங்கள் ..வளர்பிறையாய்
வாழ்வில் வெளிச்சம் தரவேண்டும்
திருமகளே,,,திசைமுழுதும்
தனங்கள் வளங்கள் மிகவேண்டும்
பெருநிலனில் பயிர்களெல்லாம்
பசுமை பொங்கி வரவேண்டும்

ஆமொருநாள் பாற்கடலில்
அவதரித் தாய்நீ அழகாக
பூமியெனும் தாய்மடியில்
பிறந்தாய் சீதை வடிவாக
பாமாநீ ராதைநீ
பாடும் ஆண்டாள் நீதானே
நாமசுகம் மீட்டிவந்த
நங்கை மீரா நீதானே

பாமகளாம் நாமகளும்
பாவை உனக்கு மருமகளாம்
ஆமையென வந்தவனே
அழகில் சிறந்த நாயகனாம்
சேமமெலாம் தருபவள்நீ
செல்வம் பெருக்கும் திருமகளாம்
தீமலரில் தேன்கொடுக்கும்
தாய்மை மிகுந்த குணமகளாம்

பாற்கடலாம் தாய்வீட்டில்
பாசக் கணவன் அவன்துயிலோ
ஆர்ப்பரிக்கும் அலைநடுவே
அரியின் துயிலே அறிதுயிலே
கால்விரல்கள் நீவுமுந்தன்
கைகள் கொடுத்த பெருஞ்சுகமே
காலமெலாம் நலம்பெருக
கருணை தருவாய் அஞ்சுகமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *