அன்னையர் மூவர்

durga-lakshmi-saraswathi

மூன்று சுடர்களின் ஒருமையிலே-இங்கு
மோனம் வளர்க்குது வாழ்வெனும் தீ
தோன்றும் கலைகள் செல்வங்கள் -உடன்
திகழும் வீரத்தில் ஒளிர்ந்திடும் தீ
தேன்துளி சுமக்கிற மொட்டைப்போல்-இந்த
தேகத்தின் உள்ளே ஒளிர்கிற தீ
நான்மறை போற்றிடும் நாயகியர்-அவர்
நல்லருள் ஒளியாய் சுடர்கிற தீ

மண்ணில் மலரும் உயிருக்கெல்லாம்-அந்த
மாதர்கள்மூவரும் துணையிருப்பார்
கண்ணில் தெரிகிற காட்சிக்கெல்லாம்-அந்தக்
காரியக் காரிகள் வழிவகுப்பார்
பண்ணில் இசையாய் ஒருத்திவந்தாள்-நல்ல
பொன்னாய் பொருளாய் ஒருத்திவந்தாள்
பண்ணிடும் காரியம் பொலிவுறவே-அன்னை
பராசக்தி என்றும் துணையிருந்தாள்

கலைமகள் அலைமகள் மலைமகளும்-நம்
கண்கண்ட தெய்வங்கள் என்றறிக
நிலையிலா வாழ்வினை உணர்ந்திடவே-அந்த
நங்கையர் மூவரும் அருள்தருக
தலையால் தருக்கும் குணம்மாற்றி -அந்தத்
தாயரும் என்றும் நலம்தருக
அலைகிற இதயங்கள் அமைதிபெற -அந்த
அன்னையர் மூவரும் அருள்தருக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *