sadhguru

 

தாமரைக்கோர் அணிகலனே!

தாங்கவரும் அருள்மலையே!

வான்மணக்கும் சூட்சுமங்கள்
          விண்டுரைக்கும் தத்துவமே!
தேன்மணக்கும் கற்பகமாய்
          திகழுகிற திருவடிகள்
சேமநிதி எங்களுக்கு;
           சத்குருவே வணங்குகிறோம்!
எல்லையிலாப் பெருங்கருணை
        எங்கெங்கும் பரவிநிற்க
வல்லமையின் திருவுருவாய்
         வந்துதித்த  அற்புதமே
சொல்லெதிலும் அடங்காத
         சுடரொளியே! வித்தகமே!
“சில்”லென்னும் சூரியனே
         சத்குருவே வணங்குகிறோம்!
உவமானம் இல்லாத
        உன்னதமே;! யோகம்செய்
 தவமான பெருங்கனிவே!
         தாயான தற்பரனே!
நவமான உலகினுக்கு
         நூதனமாய் அருளுணர்த்தும்
சிவமான சிற்பரனே
         சத்குருவே வணங்குகிறோம்!
தயவென்னும் பெருங்குணத்தின்
       திருவுருவாய் ஒளிர்கின்றாய்
முயலுகின்ற தவம்கனிந்த
        முழுவரமாய் மிளிர்கின்றாய்
அயல்நின்றார் உனையறியார்
         அண்டியவர் உனைப் பிரியார்
சுயமொளிரும்  சின்மயனே!
          சத்குருவே வணங்குகிறோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *