வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…
சில மணி நேரங்களே வாழும் பூக்களுக்கு சிரிக்க மட்டுமே தெரியும். சில நொடிகளே வாழும் தீக்குச்சிக்கு எரிக்க மட்டுமே தெரியும். நீங்கள் சிரிப்பவரா? எரிப்பவரா?
உள்ளத்தின் விகசிப்பு உன்னத மலர்ச்சியாய் மனதிலும் முகத்திலும் பூத்துக் குலுங்கும் போது, வருகிறவர்களும் போகிறவர்களும் உங்களால் வசீகரிக்கப்படுகிறார்கள்.
எந்தப் பாதுகாப்பும் இல்லாத பூக்கள் சிரிக்கக் காரணமே இல்லை. ஆனால் அவை சிரிப்பதையன்றி வேறெதும் செய்வதில்லை.
சோர்வடைய எந்தக் காரணமும் இல்லாத மனித ஜாதியில், பலருக்கும் சோர்வைத் தவிர வேறேதுவும் தெரிவதில்லை.
இது எண்ணங்களால் ஏற்படுபவையன்றி வாழ்க்கை வழங்கியதல்ல.
குறைந்தது தங்கள் மீதாவது அன்பும் மரியாதையும் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் உள்ளிலும் வெளியிலும் மலர்ந்து இருக்கிறார்கள்; மகிழ்ந்து சிரிக்கிறார்கள்.




