கண்ணாடி வளைக்கரம்போல் கலகலக்கும் அலைகளெல்லாம்
மண்ணோடு மோதுகிற மோகனத்து விளையாட்டை
கண்ணார நாம்காண காலம்வரப் போகுதடி-குதம்பாய்
விண்ணவரும் வியக்கின்ற விந்தைவரப் போகுதடி

வேர்தடவி மரம்தடவி விதம்விதமாய் மலருதிர
பூரதம்போல் நடைநடைக்கும் புனிதமான நதிகளெல்லாம்
பாரதத்தில் மறுபடியும் பெருக்கெடுக்கும் காலமடி-குதம்பாய்
ஆரத்தி எடுப்பதற்கு அனைவரையும் கூப்பிடடி

சமயமெனும் பேதமின்றி,சாதிமொழி மோதலின்றி,
குமரிமுதல் இமயம்வரை கும்மிகொட்டும் யாத்திரையாம்;
அமைதியான விழிப்புணர்வு அலைவீசப் போகுதடி -குதம்பாய்
தமையறிந்த சத்குருவின் தலைமையிலே நிகழுதடி

பல்லாயிரம் மைல்கள் பவனிவரும் யாத்திரையை
சொல்லாயிரம் கொண்டு சொன்னாலும் போதாதே!
எல்லாரும் கைகோர்க்கும் எழுச்சியுடன் நிகழுதடி-குதம்பாய்
கல்லாரும் கற்றவரும் களிப்படையும் தருணமடி

மாநிலத்து முதல்வர்கள் மேடைவரப் போகின்றார்
ஞானியவர் யாத்திரையில்நல்லோர்கள் திரளுகிறார்
தேனீயெனப் பணிபுரிவார் தொண்டரெல்லாம் பாரடிநீ-குதம்பாய்
ஏனின்னும் தாமதமோ இப்போதே கிளம்பிடடி

கங்கையொடு காவிரியும் கோதாவரி கிருஷ்ணாவும்
இங்கிருக்கும் நொய்யலுடன் எண்ணரிய நதிகளெல்லாம்
பொங்கிவரும் பொற்காலம் படைத்தளிக்க எழுந்திடுவோம்-குதம்பாய்
இங்கேநம் குழந்தைகளும் இருக்கவழி செய்திடுவோம்!

rfr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *