(கி.மு. 283 முதல் கி.மு. 350 வரை வாழ்ந்த சாணக்யரின் சிந்தனைகள் இந்தக் காலத்திற்கும் எவ்வளவோ பொருந்துகின்றன. அவரின் சில சிந்தனைகள் – நமக்காக)

1. வளைந்து கொடுப்பதால் வீழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன. எப்போதும் நிமிர்ந்தே இருப்பது மரங்களைப் போலவே மனிதர்களுக்கும் ஆபத்து.

2. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாதபோது மற்றவர்களாலும் முடியாது.

3. விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் சீறுவது அவசியம்.

4. பெரும்பாலான நட்புகளின் பின்னணியில் ஏதேனும் சுயநலம் இருந்தே தீரும். இதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

5. ஒவ்வொரு வேலையைத் தொடங்கும் போதும் மூன்று கேள்விகள் கேளுங்கள். இதை ஏன் செய்கிறேன்? இந்தச் செயலின் விளைவுகள் என்ன? இதை வெற்றிகரமாகச் செய்வேனா?

6. அச்சம் எப்போது நெருங்குகிறதோ அப்போதே அதை எதிர்த்து, அடித்துக் கொன்று விடுங்கள்.

7. ஒரு வேலையை செய்யத் தொடங்கிய பிறகு தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள்.

8. காற்று வீசும் திசையில்தான் மலரின் வாசனை பரவும். ஆனால் உங்கள் நல்ல இயல்புகள் எல்லாத் திசையிலும் பரவும்.

9. உண்மையான மகிழ்ச்சியுடன் யார் உழைக்கிறார்களோ, அவர்களே உலகில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள்.

10. உங்கள் குழந்தைகளை முதல் ஐந்து வயது வரை கொஞ்சிக் கொஞ்சி வளர்த்துங்கள். அடுத்த ஐந்து ஆண்டுகள் கண்டிப்புக் காட்டுங்கள். அதற்குப் பிறகு நண்பர்களாய் நடத்துங்கள்.

11. எல்லா மதிப்பைப் பெற்றுத் தருவது கல்வி. இளமையின் அழகைக் காட்டிலும் உயர்ந்தது கல்வியின் மதிப்பு.

12. பார்க்க முடியாதவர் முன்னால் நிலைக்கண்ணாடி எப்படி பயன்படாதோ அதுபோல் முட்டாள்களுக்குப் பரிசளிக்கும் புத்தகங்களும் பயன்படாது.

13. ஆணவம் மிக்கவரை மரியாதை காட்டி வெற்றி கொள்ளலாம். முட்டாள்களை அவர்கள் முட்டாள்தனத்தைப் பொருட்படுத்தாததன் மூலம் வெற்றி கொள்ளலாம். அறிவாளியை உண்மையின் மூலம் வெற்றி கொள்ளலாம்.

14. அற்பமான ஜந்துக்களிடம்கூட நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்தால் கற்றுக் கொள்ளுங்கள்.

15. அரசர் எளிய குடிமகன் போல் வாழ்கிற தேசத்தில், குடிமக்கள் அரசர்களைப் போல் வாழ்வார்கள்.

16. தோல்வியின் இன்னொரு பெயர் பொறாமை.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *