நவராத்திரி கவிதைகள் 8(6/10/19)
காலை திருவாரூர் மாலை திருக்கடவூர்
கோலங்கள் காணக் கிடைத்ததே – சீலமாய்
அங்கே கமலாம்பா இங்கே அபிராமி
மங்கலத்தே ஆழும் மனம் .
யோகா சனத்தே இருந்தாள் கமலாம்பா
ஏகாந்த மாக அபிராமி – ஆகா
விழிகண்ட காட்சி விரித்துரைப்பார் யாரோ
மொழிகொண்டு சேர்க்குமோ மாண்பு.
புற்றிடங் கொண்டார் பொருந்தும் கமலாம்பா
மற்றிங் கமுதீசர் மாண்பரசி – குற்றங்கள்
நீக்கிடுந் தாயர் நயனக் கனிவன்றோ
காக்கும் நமையே கனிந்து.
ஆரத்தி நேரம் அவளே இவளாவாள்
ஓரத்தில் நின்றே உளங்களித்தேன் – சாரத்தில்
சக்தி நிலையங்கள் சாநித்யம் ஒன்றேதான்
பக்தி கனிகின்ற போது .
கீர்த்தனைகள் கேட்டாள் கமலாம்பா பட்டர் முன்
ஆர்த்தெழுந்தே வந்தாள் அபிராமி – சாத்திரங்கள்
காணாத தேவியைக் காட்டுகிற பக்திநலம்
பேணல் பிறவிப் பயன்.
ஆசன மிட்டே அவளிருக்க, நின்றபடி
பூசனைகள் ஏற்றே இவள்சிரிக்க – தேசுடைய
பொன்விளக் கெல்லாமே பூரிக்க நன்னெஞ்சே
என்னிருட்டு நீங்கும் இனி .
– மரபின் மைந்தன் முத்தையா