புயல்நடுவே சிற்றகலும் புன்னகைக்கு மென்றால்

கயல்கண்ணி பார்த்த கருணை-ஒயிலாக

சந்நிதி யில்நிற்கும் சக்தியருள் பெற்றபின்னே

நன்னிலைதான் சேரும் நமக்கு.

பட்டுரசும் பாதங்கள் பூமி தனிலுரச

மொட்டவிழும் கற்பகப்பூ மண்ணெங்கும்-எட்டுதிசை

வீசும் வளைக்கரங்கள் வையமெலாம் காப்பதனைப்

பேசும் பணியே பணி.

மயிலானாள் கற்பகத்தாள் மாதேவன் ஆடக்

குயிலானாள் கீதம் கொடுத்தாள்-துயர்தீரப்

பாடும் அடியார்தம் பாட்டானாள் பொற்சபையான்

ஆடும் ஜதியானாள் அங்கு

மாயை வடிவானாள் மாயை தனைத்தொலைக்கும்

தீயின் வடிவாகத் தானானாள்-தூய

வடிவானாள் ஞான விடிவானாள் வேத

முடிவானாள் அன்னை முகிழ்த்து

வண்ணங் கறுப்பென்றே வம்புசெய்த ஈசனவன்

கண்டங் கறுக்கவே கைவைத்தாள்-உண்டநஞ்சை

தீண்டியமு தாக்குந் திரிபுரையாள் பாதவிரல்

தூண்டுவதே குண்டலினித் தீ.

காமன்கைக் கொண்ட கரும்புவில்லைத் தீய்த்தவனின்

வாமத்தை ஆளுகிற வல்லியின்கை- சேமத்தில்

தோன்றும் கரும்புவில்லில் தோற்றபின்னே ஈசன்கால்

ஊன்றவழி உண்டோ உரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *