கட்டிவைத்தும் மனக்களிறு கட்டுப்படாது-அது
காமங்கொண்டு பிளிறுவதை விட்டுவிடாது
தட்டிவைக்க அவள்வராமல் தலையடங்காது-எங்கள்
தேவதேவி குரல்தராமல் நிலையடங்காது

அங்குசத்தைக் கொண்டுநின்றாள் ஆலயத்திலே-நம்
அகந்தையெல்லாம் தளரவைக்கும் ரௌத்திரத்திலே
அங்கயற்கண் பார்வைபட்ட ஆனந்தத்திலே-அட
ஆனையெல்லாம் பூனையாகும் சிவலயத்திலே!

பாணமைந்தும் கரும்புவில்லும் பூங்கரத்திலே-ஒரு
பார்வையிலே மனமடங்கும் அவள்பதத்திலே
கோணங்களோ ஒன்பதுஸ்ரீ சக்கரத்திலே-நவ
கோள்களெல்லாம் வணங்கிநிற்கும் ஸ்ரீபுரத்திலே 

சிந்துரத்தில் தோய்ந்தபாதம் சமர்க்களத்திலே-கொடும்
சினமெழுந்து சூலமேந்தும் அமர்க்களத்திலே
வந்தபகை மாய்க்கும் அன்னை ஒளிரதத்திலே-அவள்
வைத்தசுடர் பற்றிக்கொள்ளும் வினைப்புனத்திலே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *