தொலைபேசியில் ஒரு நண்பர் அழைத்து வாழ்த்தினார்.”சார்! கவிஞருக்கு பத்மபூஷண் கிடைச்சிருக்கு.ரொம்ப சந்தோஷம்.என் வாழ்த்துகளை சொல்லுங்க!”

“நன்றிங்க! கண்டிப்பா சொல்லிடறேன்!”

“சார்..ஒரு சந்தேகம்.
“அவருக்கு பத்மபூஷண் எத்தனாவது தடவையா தர்றாங்க?”

நான் அதிர்ந்து போய்…..”அதெல்லாம் ஒருதடவை தாங்க தருவாங்க”

“ஓஓ…அப்ப பத்மஸ்ரீதான் நெறைய தடவ வாங்கியிருக்காரு!இல்லீங்களா?”

“இல்லீங்க ! அதுவும் ஒருமுறைதான் தருவாங்க!”

எதிர்முனையில் இருப்பவர் குழம்பிப்போய்,”இல்லீங்க! பலமுறை வாங்கியிருக்காருன்னு நீங்களே மேடைகள்லே சொல்லியிருக்கீங்க!மறந்துட்டீங்கன்னு நெனைக்கறேன்.எதுக்கும் ஒருதடவை கவிஞர்கிட்டேயே கேட்டு சொல்லுங்க!”

“ஹலோ! ஹலோ!” நான் மீண்டும் விளக்குவதற்குள் வைத்துவிட்டார். அவரைச் சொல்லி பயனில்லை.சிறந்த திரைப்பாடலாசிரியர் என்னும் விருதை கவிஞர் வைரமுத்து பலமுறை வாங்கப்போய் இவர் எல்லா விருதுகளையும் பலமுறை வாங்கியிருக்கிறார் போலும் என்று அந்த நண்பர் நினைத்துவிட்டார்.

அதற்குள் அடுத்த தொலைபேசி.”வணக்கங்க சார்!நாங்க திருப்பூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறையிலிருந்து பேசறோமுங்க!”
“வணக்கம்மா! சொல்லுங்க..
“சார்! கவிஞர் வைரமுத்து பத்மபூஷண் வாங்கியிருக்காரில்லீங்களா!அவர எங்க கல்லூரிக்கு அழைச்சு வர்றதா சொன்னீங்களே,எப்ப அழைச்சுட்டு வர்றீங்க சார்!”
“நான் எப்பம்மா சொன்னேன்?”
“சார்! 2003லே நீங்க எங்க கல்லூரிக்கு சிறப்பு விருந்தினரா வந்தப்போ நாங்க கேட்டதுக்கு கவிஞரை அழைச்சுட்டு வர்றதா சொன்னீங்களே சார்!”
‘என்னம்மா இது அநியாயமா இருக்கு?பதினோரு வருஷம் கழிச்சு கேட்கறீங்களே! தசரதன் வரம் கொடுத்த கதையால்ல இருக்கு”

“ஓ! தசரதன்ங்கிறவரத்தான் கேக்கோணுங்களா!அவரு நெம்பர் என்னங்க சார்”.அசந்து போனவன் சிறிது நேரம் செல்லிடப்பேசியை அணைத்து வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

இலக்கியம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான பங்களிப்புக்கு அரசின் அங்கீகாரமாய் பத்மபூஷண் விருதுக்கு  கவிஞர் வைரமுத்து அவர்கள் தேர்வாகியிருக்கும் செய்தி ஜனவரி 25 மாலை வெளியானதிலிருந்து எனக்கு ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள்.ஜனவரி 26 காலை கவிஞரை அவர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்.

பத்மபூஷணை வாழ்த்தும் பத்மபூஷண்




சில ஆண்டுகளுக்கு முன்னர் பத்மபூஷண் விருது பெற்ற அருட்செல்வர் டாக்டர்.நா.மகாலிங்கம் அவர்கள் அப்போதுதான் நேரில் வந்து வாழ்த்திவிட்டுச் சென்றிருந்தார்.”என் மகிழ்ச்சியை மறைக்க விரும்பவில்லை”என்று பேட்டியளித்திருந்த கவிஞர் உள்ளபடியே உற்சாகமாயிருந்தார். கூட்டத்தில் தயங்கித் தலைமறைவாய் நின்றவர்களையும் பெயர் சொல்லி அழைத்து நலம்  விசாரித்தார்.

கவிஞருக்கு இதேபோல் 2003 ஜனவரி 25 மாலையில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது நான் திருவண்ணாமலையில் விழா மேடையில் இருந்தேன்.மறுநாள் காலை அருணாசலேஸ்வரர் சந்நிதியில் கவிஞர் பேருக்கு அர்ச்சனை செய்து பிரசாதத்துடன் வெளியே வந்தபோது,நாவுக்கரசர் சத்தியசீலன் அவர்கள் எதிரே வந்தார்கள்.கவிஞர் விருது பெற்றிருக்கும் செய்தியை சொன்னதும்,”அவருக்கெல்லாம் நேரடியா பத்மபூஷண் கொடுத்திருக்கணும்”என்றார் பேராசிரியர்.பதினோரு ஆண்டுகள்..இடையறாத,நிதானமான,அழுத்தமான பங்களிப்புக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்.

நண்பர் கோவை ரமேஷ் வாழ்த்துகிறார்



வெளியே கலைஞர் தொலைக்காட்சியினர் கவிஞரின் நேர்காணலுக்குக் காத்திருந்தனர். கவிஞர் வரும்முன்பு அறிவிப்பாள்ர் தன் முன்னுரையை பதிவு செய்து கொண்டிருந்தார்.
ஒரு குரல் குறுக்கிட்டது.”ஏங்க தயங்கித் தயங்கி பேசறீங்க! தடுமாறாதீங்க! இன்னும் சிரிச்ச முகமா பேசுங்க!” திகைத்துப் போன அறிவிப்பாளர் குரல் வந்த திசையைத் தேடிப் பார்த்தார்.
இயக்குநர் சீனு ராமசாமிதான் குரல் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்ததும் பரவசமானார். காமிராவுக்குப்பின்னால் இயக்குநர் சீனு ராமசாமி நிற்க,அவரின் “இடம் பொருள் ஏவல்”படத்தின் கதாநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டு விட்டவர் போல் மேலும் பரவசமாகி மேலும் தடுமாறினார்.ஆனால் கவிஞர் வந்ததும் கேள்விகளைத் துல்லியமாகக் கேட்டார்.

“பலமுறை தேசிய விருதுகள்.பிறகு சாகித்ய அகாதமி,மூன்று டாக்டர் பட்டங்கள்.பத்மஸ்ரீ விருது.இப்போது பத்மபூஷண்.அடுத்து எதை நோக்கிப் போகிறீர்கள்”என்ற கேள்விக்கு கவிஞர் தந்த பதில்,
“நான் மானுட மேம்பாடு என்னும் இலக்கை நோக்கிப் பயணம் போய்க்கொண்டிருக்கிறேன். வழியில் சில மரங்கள் என்மேல் பூக்களை உதிர்க்கின்றன.அவை உயர்ந்த பூக்களாகவும் இருக்கின்றன.அவை மேலே விழுந்ததில் மகிழ்ந்து மேலும் பயணம் தொடர்வேனே தவிர மரத்தடியிலேயே படுத்து உறங்கிவிட மாட்டேன்”.

இந்தத் தெளிவும் நிதானமுமே இவரை இவ்வளவு தொலைவு அழைத்து  வந்திருக்கிறது. இன்னும் நெடுந்தூரம் அழைத்துச் செல்லவும் இருக்கிறது.
கவிஞர் பத்மஸ்ரீ விருது பெற்றபோது “சிகரங்கள் உனக்கு சமவெளிச்சாலை1 சாதனை உனக்கு தினசரி வேலை”என்றெழுதினேன்.

“மதுரை” கவிதையில் கவிஞர் பட்டியல் போட்டதுபோல்

“மல்லிகை மௌவ்வல் அரவிந்தம்-வாய்
மலரும் கழுநீர் சுரபுன்னை
குல்லை வகுளம் குருக்கத்தியோடு”


சிகரங்களில்எப்போதோ பூக்கும் குறிஞ்சிப்பூக்களும் மேலே விழுந்து இவரின் இலக்கியப் பயணத்தில் மேலும் இதமும் மணமும் சேர்க்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.வாழ்த்துகள் கவிஞர்!!



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *