எவரோ நீட்டும் கரம்பார்த்தும்
என்கரம் பற்றிச் சிரிக்கின்றீர்
தவமே அன்பாய் ஆனதனால்
தானாய் மகானாய் இருக்கின்றீர்
தவறோ சரியோ எனக்கேட்டால்
தவறும் சரியும் ஒன்றென்பீர்
திவலை நீர்த்துளி பட்டாலும்
தேன்குளம் என்றே கொள்கின்றீர்

வண்ண தாசன் என்பவர்க்கோ
வண்ணங்கள் எல்லாம் ஒன்றேதான்
வண்ண தாசனைப் படித்தவர்க்கோ
விரியும் உலகம் வேறேதான்
வண்ண தாசனை வாழ்த்துவது
விரியும் மொட்டை வாழ்த்துவது
வண்ணதாசனாய் வாழுவது
வாழ்வை புதிதாய்க் காணுவது

தந்தை பதித்த தடமிருக்க
தமையன் விட்ட இடமிருக்க
முந்தும் தமிழே திசைநிரப்பும்
மெல்லிய மனதை இசைநிரப்பும்
சிந்தை இன்னும் இலகுவாக
செய்பவை எல்லாம் நிறைவாக
எந்தை!! வாழிய பல்லாண்டு
ஏழு சுரம்போல் சொல்லாண்டு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *