உடலெனும் கனவு; சுடலையில் விறகு;
 கடலெனும் வினைகள்  கடந்திடும் படகு;
படகில் சிலபேர் பவவினை கடப்பார்;
படகைச் சிலபேர் பாதியில் கவிழ்ப்பார்;
கற்றவை ,கேட்டவை, கண்டவை என்று
பற்றுச் சரக்குகள் பலவும் குவிப்பார்
விற்று வரவில் வினைகள் வளர்ப்பார்;
வெற்றுப் படகே விரைய வல்லது;
வட்டியும் முதலுமாய் வாங்கிச் சேர்த்ததை
கொட்டிக் கவிழ்ப்பவர் கெட்டிக் காரர்;
மலர்நிகர் குருவின் மணிக்கழல் இரண்டும்
வலிக்கும் துடுப்பாய் வாய்ப்பவர் கடப்பார்
நீச்சல் தெரிந்த நினைவில் குதிப்பவர்
வீச்சில் சுருண்டு வெறுமனே தவிப்பார்;
பிணைக்கும் இந்தப் பிறப்பு முதல்கரை
அணைக்கும் முக்தி அதுதான் மறுகரை;
கரைகா ணாமையின் கரைதொடும் சாதனை
உரையால் உணர்வதோ உலகத்தீரே!

regards
Marabin Maindan Muthiah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *