எல்லா சொற்களும் என்முன் வரிசையாய்…

நில்லாச் சொற்களும் நங்கூரமிட்டன;

பொல்லாச் சொற்கள் பொடிப்பொடி ஆயின;

சொல்லாச் சொற்கள் சுரக்கவே யில்லை;

பசித்தவன் எதிரில் பந்தி விரித்தும்

ரசித்தேன் அன்றி ரணமெதும் இல்லை;

முந்திக் கொள்கிற முந்திரிச் சொற்கள்

மந்திர மௌனத்தின் மதுவில் ஊறின;

கண்கள் இரண்டும் கோமுகி ஆகிட

பண்கள் மலர்ந்து பாடல் கனிந்தது;

மூன்றாம் கண்ணின் மெல்லிய திறப்பாய்

ஊன்றிய திருவடி உணரும் சிலிர்ப்பாய்

தேனின் ஒருதுளி திரளும் தவிப்பாய்

ஆன்ற மௌனம் அளிக்கும் அற்புதம்;

பிரபஞ்சம் பிறந்தது மௌனத்தின் கருவில்

பெருமான் அமர்ந்தது மௌனத்தின் உருவில்

நரகம் தொலைந்தது;நிறைந்தது அமைதி

இருவினை எரிந்தது; இது அவன் நியதி;

தவமே மௌனம்;வரமே மௌனம்

சிவமே மௌனம்; சுகமே மௌனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *