அவள்மடியில் ஒருவீணை அவள்தந்த ஸ்வரம் பாடும்

அவள் விழியில் மலர்கருணை அடியேனின் கவியாகும்

அவள் துகிலில் நிறைவெண்மை அது கலையின் மடியாகும்

அவள்வரையும் ஒருகோடு அதுகோலம் பலபோடும்

வாணியவள் வகுத்தபடி வையமிது சுழல்கிறது

பேணியவள் காப்பவையே பூமியிலே நிலைக்கிறது

காணிநிலம் கேட்டவனை கம்பனெனும் மூத்தவனை

ஏணியென ஏற்றியவள் எனக்கும்கூட இடமளித்தாள்

களிதொட்ட இசையெல்லாம் கலைமகளின் குரலாகும்
உளிதொட்ட கல்லையெல்லாம் உயிர்ப்பதவள் விரலாகும்
வளிதொட்ட நாசியிலே வரும்சுவாசக் கலைதந்தாள்
தெளிவுற்ற தத்துவங்கள் தேவதேவி அருள்கின்றாள்

பொய்யாத வான்முகிலாய் புவிகாக்கும் பேரரசி

கொய்யாத மலர்களிலும் கண்சிமிட்டும் பேரழகி

கையாலா காதவனை கவிஞனென வாழ்வித்த

மையாரும் வேற்கண்ணி மலரடிகள் தொழுகின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *