அந்த மூன்று பெண்களுக்கும்

அன்புமட்டும் தெரியும்

அந்தமூன்று பெண்களாலே

அற்புதங்கள் நிகழும்

அந்தமூன்று பெண்கள் பார்க்க

அவதி யாவும் அகலும்

அந்த மூன்று பெண்களாலே

உலகம் இங்கு சுழலும்

கலைமகளின் கருணை கொண்டு

கல்வி கற்பான் சிறுவன்

அலைமகளின்ஆசிபெற்று

ஆட்சி கொள்வான் இளைஞன்

மலைமகளும் மனது வைத்தால்

மேன்மைகொள்வான் மனிதன்

விலையிலாத இவர்வரங்கள்

வாங்கியவன் தலைவன்

சாத்திரங்கள் இவர்கள்புகழ்

சாற்றிநிற்கும் நாளும்

ராத்திரிகள் ஒன்பதுமே

ரஞ்சிதமாய் ஜாலம்

மாத்திரைப் பொழுதுகூட

மறந்திடாமல் நாமும்
காத்துநிற்கும் அன்னையரை
கருத்தில்வைத்தால் போதும்

மங்கலங்கள் சூழ்கவென்று

மூவருமே அருள

இங்குமங்கும் எந்தநாளும்

இன்பமெல்லாம் நிறைய

சங்கடங்கள் அத்தனையும்

சடுதியிலே அகல

எங்கள் மூன்று அன்னையரே

எங்கள் இல்லம் வருக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *