ஒரு பெரிய மனிதர் இருக்கிறாரென்றால் அவரைக்காண வெவ்வேறு
நோக்கங்களுடன் வெவ்வேறு விதமான ஆட்கள் வருவார்கள்.அந்தப்
பெரிய மனிதருக்கு சொந்தமாக சில ஆலைகள் இருக்கலாம், கடைகள்
இருக்கலாம்.அவர் தன் பெற்றோர் நினைவாக ஓர் அனாதை இல்லமும்
நடத்திக் கொண்டிருக்கலாம்.

அவருடைய தொழிற்சாலைகளில் வணிக வாய்ப்பு தேடி சிலர் சந்திக்க
வருவார்கள்.அவருடைய நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகள் சில
முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமென்று வருவார்கள்.அவரோ
நாளின் பெரும்பகுதியை அனாதைக்குழந்தைகளுக்கான விடுதியில்தான்
கழிப்பது வழக்கம்.அங்கே அவருக்கு செலவுதான்.மற்ற இடங்கள்
வருமானம் தருகிற இடங்கள்.அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இங்கே
இருக்கிறார்.

அம்பிகையும் இதைத்தான் செய்கிறாள் என்கிறார் அபிராமிபட்டர்.
“வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்”.
அமரரென்றும் அசுரரென்றும் தனியாக யாருமில்லை.வரங்கள்
வாங்கி அமரநிலை அடைந்தவர்களும், சாபங்கள் வாங்கி அசுரநிலை
அடைந்தவர்களும் அம்பிகையை வணங்குவதற்காக வருவார்கள்.
வானவர் என்றால் அமரர்கள். தானவர் என்றால் அசுரர்கள்.

“சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர்” ஒருவரின் சார்பாக
நிர்வாகத்தைக் கவனிப்பதற்கு இரண்டாம்நிலை நிர்வாகம் என்று பொருள்.
அந்த நிலையில் இருப்பவர்கள்,தங்கள் மேலதிகாரிகளின் எண்ண ஓட்டம்
என்னவாக இருக்குமென்று சிந்தித்து அதன்படி செயல்படுபவர்கள்.

“சிந்தையுள்ளே பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்”மனதுக்குள் சதாசர்வ
காலமும் அம்பிகையையே நினைத்து அந்த பந்தத்தாலேயே பேரின்பம் காண்பவர் சிவபெருமான்.உலக வாழ்வின் பந்தங்கள்தான் துன்பத்தைத் தரும்.
“சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது ,அதில் பந்தம் ஒரு கால்விலங்கு நான்போட்டது என்றார் கண்ணதாசன்.உமையம்மை மீது சிவபெருமானுக்கு இருக்கும் பந்தமோ அழிவில்லாத பரமானந்தத்தைத் தருகிறது.

தேவர்களும் அசுரர்களும் வணங்குவதற்காகத் தேடிவர,நான்முகனும்
நாரணனும் அம்பிகைக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று
சிந்தித்திருக்க ,சிவபெருமானோ அம்பிகையின் நினைவிலேயே
பரமானந்தத்தில் திளைக்க உலக மக்களின் காட்சிக்கு மட்டும்
அம்பிகை எளிதில் கிடைப்பதோடு தன் குளிர்ந்த அருளையும் வலிய வந்து தருகிறாளாம் .

வந்திப்பவர் உன்னை வானவர் ஆனவர் தானவர்கள்
சிந்திப்பவர் நல்திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாமுத்திப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டிநின் தண்ணளியே

தேவர்களும் அசுரர்களும் இன்னபிற தெய்வங்களும் அம்பிகையை
தரிசிக்க சிரமப்படலாம். மனிதர்களுக்கு அந்தச் சிரமம் கிடையாது.
அவளுடைய தரிசனம் கிடைத்தற்கரிய பேறு என்று தெரியாதவர்களுக்கும்
அந்தத் தரிசனம் ஒரு சாதாரண சந்திப்பாகவே நிகழ்ந்து விடுவதுண்டு.
தான் அள்ளி அணைக்க நினைக்கும் பிள்ளைகள் நடுவில்தானே அம்பிகை
இருப்பாள். அவர்களின் காட்சிக்குத்தானே எளிதில் கிடைப்பாள்.
அவர்களுக்குத்தானே அருளை அள்ளி அள்ளிக் கொடுப்பாள்.
“மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *