தூவிய விதையில் வான்மழையின
துளிகள் படுவது யாராலே
ஏவிய கணைகள் இலக்குதனை
எட்டி விடுவதும் எதனாலே
மேவிய ஒழுங்குகள் எத்தனையோ
மேதினி இயக்கத்தை ஆள்கிறது
ஆவல் வளர்க்கும் விந்தையிது
ஆண்டுகள் பலவாய் தொடர்கிறது!

யாரோ முயற்சி தொடங்குகையிலே
எவரோ துணையாய் வருகின்றார்
ஊரோ உலகோ அறியு முன்னே
உதவிக்கு அந்நியர் எழுகின்றார்
சீராய் முயற்சி முன்னெடுத்தால்
சரியாய் பாதை அமைந்துவிடும்
நேராய் கடவுள் தெரிவதில்லை
நடப்பவை அவர்துணை காட்டிவிடும்

வீணாய்த் தயங்கிக் கிடக்காதே
விருப்பம் நோக்கி நடைபோடு
தானாய் முதலடி வைத்தாலே
தேடல்கள் தொடரும் ஒருவாறு
வானாய் வளைந்து கொடுப்பதில்லை
விண்களம் போல்நீ கிளம்பிவிடு
ஏனோ இன்னும் கூச்சங்கள்
எண்ணிய எல்லாம் அடைந்துவிடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *