வாரியும் கொடுக்கும் வாங்கியும் மறைக்கும்
வாழ்க்கையின் கணக்கினை யாரறிவார்?
ஆர்வமும் ஆற்றலும் சேர்ந்திடும் வேளையில்
ஆயிரம் நலம்வரும் யார்தடுப்பார்?
கூரிய நோக்குடன் நீசெல்லும் பாதையில்
குறுக்கிடத் துணிந்து யார்வருவார்?
வேர்விடும் கனவுக்கு நீர்விடத் துணிந்தால்
வெற்றிகள் வருவதை யார்மறைப்பார்?

எல்லாச் செயலுக்கும் எதிர்வினை உள்ளது
இதைத்தான் விதியெனச் சொல்லுகிறார்
நல்ல செயல்களை நாளும் புரிபவர்
நன்மைகள் ஆயிரம் அள்ளுகிறார்
வல்லவன் சறுக்குதல் நிகழ்ந்தாலென்ன
விரைவாய் எழுவது சாத்தியமே!
செல்கிற திசையெது? சரியாய்த் தெரிந்தால்
ஜெயிப்பாய்! இதுதான் சூத்திரமே!

ஆழியில் மேகங்கள் வாரிய நீர்த்துளி
அதுதான் மழையென விழுகிறது!
வாழ்க்கையில் இதுவரை வாங்கிய அனுபவம்
வெற்றியின் பெயரால் வருகிறது!
சூழ்கிற சோர்வினை சுண்டி எறிந்திடு
சூரிய வெளிச்சம் போலெழுவாய்!
தாழ்வுகள் எல்லாம் தற்காலிகம் நீ
தடைகளை உடைத்துத் தலைநிமிர்வாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *