சிறுத்தைகள் திரிகிற காடென்று
சிறுமான் மேயாதிருப்பதில்லை;
குறுகிய கவலையில் வாழ்பவர்கள்
குறிக்கோள் என்றும் தொடுவதில்லை.

பூமி பரந்தது அதிலுனக்குப்
பாதை இருப்பது நிச்சயமே!
ஆமை வேகம் உதறிவிட்டு
நீயாய் எட்டிடு இலட்சியமே!

காலம் எதையும் புரட்டிவிடும்
கணப்பொழுதுக்குள் நிமிர்த்திவிடும்
நாளை காட்சிகள் மாறிவரும்
நினைத்தவை நிஜமாய் ஆகிவிடும்!

சென்றதை நினைத்துப் புலம்பாதே
செல்லும் திசையில் வெளிச்சம் வரும்
என்றைக்கும் உள்ளம் கலங்காதே
எண்ணம் போல வாழ்வுவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *