மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
சில்வண்டுகளின் சிணுங்கலில் உள்ளது
கடவுள் அனுப்பிய கடைசித் தகவல்!
நீங்களும் நானும் உறங்கும் பொழுதில்
நிசப்தம் அதனை உற்றுக் கேட்கும்;
தகவலினூடே தெறிக்கும் குறும்பில்
ககனம் சிரிக்கும் கண்கள் மினுங்க;
“ரீட் ரீட் ரீட்” எனும் சங்கேதத்தில்
தாவரங்களுக்குத் தரும் குறிப்புகளில்
மறுநாள் விடியல் நிர்ணயமாகும்!
பூமி வழியாய் ஒவ்வொரு நாளும்
பயணமாகிப் போகும் இரவின்
பாதை சரியென உறுதி செய்யவே
கேட்கும் இந்தச் சில்வண்டுச் சத்தம்.
உறங்காதிருக்கும் முனிவர்களுக்கு
அர்த்த ஜாம உபதேசம் செய்ய
சிறகுகள் முளைத்த சித்த கணங்களாய்
சில்வண்டுகள் அவதரிக்கின்றன.
மூல மந்திர முனகலைக் கேட்டே
காலம் நடக்கும்… கால காலமாய்!