Durgai

மொத்தப் பிரபஞ்சங்கள் எத்தனையோ அத்தனைக்கும்
மூச்சாகி நின்றவளே வாழ்க
பித்தனின் நடனத்தைப் பக்கத் திருந்தபடி
பார்க்கின்ற பேரழகி வாழ்க
வித்தைகள் அனைத்துக்கும் வித்தாகி நிற்கின்ற
வித்தக சக்தியே வாழ்க
யுத்தங்கள் நிகழ்த்திடும் இடதுகால் சிறுவிரல்
எய்திடும் வெற்றிகள் வாழ்க
 
திருவிழி ஓரத்தில் தென்படும் பேற்றுக்காய்
திருக்கோவில் தினம்தேடி வந்தேன்
வருவினை எரிக்கின்ற வகையேதுந் தெரியாமல்
வலிநூறு தினங்கொண்டு நொந்தேன்
ஒருமுறை உன்நாமம் உரைத்ததும் பராசக்தி
உறுகின்ற சுமைநீங்கக் கண்டேன்
கருவெனும் வலைவீழும் காரியம் இனியில்லை
காளிநின் உளம்கண்டு கொண்டேன்
 
 
வேதங்கள் படிகளாய் விளங்கிடும் திரிபுரம்
வீற்றருள் புரிகின்ற தாயே
நாதங்கள் சலங்கையாய் நிருத்தியம் புரிந்திடும்
நாயகி நான்முகி நீயே
பேதங்கள் காட்டியும் ஒன்றெனக் கூட்டியும்
பலமாயம் செய்கின்ற மாயே
போதமே போதத்தின் சாரமே புண்ணியப்
போகமே பேரெழில் சேயே
 
 
காலையில் எழுஞ்சுடர் கடும்பகல் சுடுங்கனல்
கண்ணெதிர் குளிர்கின்ற ஜாலம்
வாலையே நின்னருள் லீலையே இங்கிதை
வாயார இசைத்தலே கானம்
நீலமாம் வானும்நீ நித்தில நிலவும்நீ
நட்சத்ர கும்மாளம்  நீதான்
மூலமே ஆதியே முடிவிலா நீலியே
முக்தியின் அற்புதம் நீதான்
 
 
மேருவுன் ஆசனம் மந்திரம் வாகனம்
மேதையர் உளமெலாம் கோவில்
கூருகிர் நகங்களால் குடரையும் வாங்கியே
கூத்திடக் குருதியும் நாவில்
காருண்ய ரூபமாய் கனிந்திடும் தாய்மையாய்
காமாட்சி தோன்றுக நேரில்
பேரன்பின் ஆழியே புவனத்தின் தாய்மையே
புதுமேன்மை பெருகவிடு வாழ்வில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *