கடையும் மத்தும் கடையூர்க்காரியும்
—————————————————————–
பால்போன்றதுதான் உயிர் .அதில்விழும் வினைத்துளிகளில் உயிர்
உறைந்து போகிறபோது வந்து கடைகிறது மரணத்தின் மத்து.மரணம்
மட்டுமல்ல.மரணத்துக்கு நிகரான எந்த வேதனையும் உயிரை மத்துப்போல்தான் கடையும். சீதையைப் பிரிந்து இராமன் உற்ற
துயரை அனுமன் சீதைக்குச் சொல்லும்போது
“”மத்துறு தயிரென வந்து சென்றிடைத்
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற
பித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை” என்கிறான்.
குளிர்ந்த தயிரை மத்தால் கடைந்தால் துனி பறக்கும்.ஆனால் உயிராகிய
தயிர் கடையப்படுகிறபோது புலன்களில் நெருப்புப் பொறியே
பறக்கிறது என்கிறார் மானிக்கவாசகர்.
“மத்துறு தண்தயிரின்புலன் தீக்கதுவக் கலங்கி”” என்கிறார்.
அப்படித் தள்ளாடும் உயிர் தளராத வண்ணம் கதிதரக்கூடிய
காருண்யை அபிராமவல்லி.ஏனெனில் பிறத்தல் இருத்தல் இறத்தல்
ஆகியவற்றுக்கு அதிபதிகளான மூவரும் வந்து அவளுடைய
திருவடிகளைத்தான் பணிகிறார்கள்.
“ததியுறு மத்தில் சுழலுமென் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வந்து சென்னி
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே”.
மூவரில் மிக்க மகிழ்வுடன் துதிப்பவர் சிவபெருமாந்தானாம்.தன் மனைவியின்மீது முழு உரிமை இருப்பினும் அவள் பெருமையறிந்து
மனதார வாஅங்குவதில் மலர்கிற மகிழ்ச்சி அது.எனவே மதியுறு வேணி
மகிழ்நன் என்கிறார் பட்டர்.திலகந் தீட்டிய திருநுதலாள் அபிராமி கலகம்
நிகழும் நொடியில் உயிரின் கலக்கம் நீக்கி கதியளிப்பாள் என்கிறது இந்தப்பாடல்.
வாழ்க்கை என்பதே வினைநீக்கும் ஏற்பாடுதான்.அது எவ்விதம் நிகழ்கிறது என்பதில்தான் எல்லாம் நிகழ்கிறது. தன்னுடைய உயிரின்
வினைகள் நீங்கப்பெற வேண்டும் என்னும் விருப்புணர்வோ
விழிப்புணர்வோ இல்லாமலும் கூட எத்தனையோ பிறவிகளாய்
பாசமாம் பற்றை வளர்த்து வருகிறோம். செவ்வண்ணப் பேரழகியாம்
அபிராமி எவ்வண்ணம் அந்த வினைகளை அகற்றுகிறாள் என்பதை
சுவைபடச் சொல்கிறார் அபிராமி பட்டர்.
அவளைப் பேரழகி என்ற கையோடு “எந்தை துணைவி”என்றும்
அழுத்தம் தருகிறார்.சிவபெருமான் பேரழகனாகவும் இருக்கிறான்.
அகோரமூர்த்தியாகவும் இருக்கிறான். அவருக்கேற்ற பேரழகி
என்றும் சொல்லலாம்.அவரைவிடப் பேரழகி என்று கொள்ளலாம்.
அழகின் சிறப்பில் மட்டுமா அம்பிகை தனித்து நிற்கிறாள்?வினைகளை
அகற்றும் விதத்திலும் அவளுக்கு நிகர் அவள்தான்.சிவபெருமான்
பற்றுகளை அறுக்கும் பரமன். வலிக்க வலிக்க அகற்றுவார். பாசமாம்
பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனின் காரியம் அப்படி. அம்பிகையோ
“என் பாசத்தொடரையெல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாள் ”
என்கிறாள். குழந்தை உறங்கும் நேரத்தில் அதன் துயிலைக் கலைக்காமல்
அது முகத்தைக்கூட சுளிக்காமல், மெதுவாய்..மிக மெதுவாய் நகங்களைக் களையும் அன்னைபோல் வினைகளைக் களைகிறாளாம் அபிராமி.
“சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள்”
மனமென்னும் அந்தரங்கத்தில் நிறைபவளாய்,ஆகாயமென்னும் அந்தரத்தை ஆள்பவளாய் இருக்கும் அபிராமி,மகிடனின்
தலைமேல் திருவடி பதித்து அவனுடைய அகந்தைக்கு மட்டுமின்றி
அறியாமைக்கும் அந்தமாய் நிற்கிறாள்.
சியாமள வண்ணத்தினளாகிய நீலியும் அவள். கன்னிமை அழியாத
அன்னையும் அவள்.நான்முகனின் அகந்தை அழியுமாறு அவனுடைய
சிரசினை சிவபெருமான் கொய்தார்.அந்த பிரம்ம கபாலத்தை அம்பிகை
தன்னுடைய கைகளில் கொன்டிருக்கிறாள்.அவளுடைய திருவடிகளை
நான் என் மனத்தில் கொண்டிருக்கிறேன் என்கிறார் அபிராமி பட்டர்
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கம்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே”