வானை அளக்கிற ஆற்றலுடன் இன்று
வந்தனர் மானிடர் ஞானப்பெண்ணே – தன்னைத்
தானும் அளக்கிற ஆற்றலினை -அவர்
தேடிடச் சொல்லடி ஞானப்பெண்ணே!

உச்ச வரம்புகள் இல்லாமலே – இன்று
ஊதியம் காண்கிறார் ஞானப்பெண்ணே
அச்சம் சோர்வுடன் துக்கமெல்லாம் – வந்து
அண்டாமல் வாழச்சொல் ஞானப்பெண்ணே!

நாடு கடக்கிற கல்விகற்றே – இன்று
நாளும் பறக்கிறார் ஞானப்பெண்ணே
வீடு வருகிறபோதினிலே – அவர்
வேதனை கொள்வதேன் ஞானப்பெண்ணே!

சற்றும் சிரமங்கள் ஏதுமின்றி – இன்று
செல்வங்கள் சேர்க்கிறார் ஞானப்பெண்ணே
சுற்றம் சொந்தங்கள் யாருமின்றி – அவர்
சோர்ந்து கிடப்பதேன் ஞானப்பெண்ணே!

காசு கொழிக்கிற காலமடி – இன்று
கொஞ்சமும் குறைவில்லை ஞானப்பெண்ணே
மாசு படிகிற சூழலினை – இவர்
மாற்றிடச் சொல்லடி ஞானப்பெண்ணே!

நூறு கருவிகள் வந்தாலும் – இன்று
நிம்மதி எங்கடி ஞானப்பெண்ணே!
ஊறிடும் நம்பிக்கை உள்ளத்திலே – கொண்டால்
ஊனங்கள் இல்லையே ஞானப்பெண்ணே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *